சேதுக்கரையில் சக்கரத்தாழ்வாருக்கு தீர்த்தவாரி: கருட வாகனத்தில் சுவாமி
திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில் பங்குனி பிரம்மோற்ஸவம் விமர்சையாக நடந்தது. கடந்த மார்ச் 24 அன்று காப்பு கட்டுதலுடன் துவங்கியது. நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் பெருமாள் உற்ஸவ வீதி புறப்பாடு நடந்தது. நேற்று பெரிய தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று காலை 9:00 மணிக்கு பெருமாள் கோயிலில் இருந்து கருட வாகனத்தில் கல்யாண ஜெகநாத பெருமாளும், அனுமார் வாகனத்தில் பட்டாபிஷேக ராமரும் புறப்பட்டுச் சென்றனர். காலை 10:30 மணிக்கு சேதுக்கரையில் உள்ள சேதுபந்தன ஜெயவீர ஆஞ்சநேயர் கோயில் முன்புறமுள்ள கடலில் மேளதாளங்கள் முழங்க சக்கரவத்தாழ்வாருக்கு தீர்த்தவாரி உற்ஸவம் நடந்தது. பட்டாச்சாரியார்களால் நாலாயிர திவ்ய பிரபந்த பாடல்கள் பாடப்பட்டன. சேதுக்கரையில் உள்ள மண்டபத்தில் உற்ஸவமூர்த்திகளுக்கு விசேஷ திருமஞ்சனம் சாற்றுமுறை, கோஷ்டி பாராயணம் உள்ளிட்டவைகள் நடந்தது. பின்னர் மாலை 5:00 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு திருப்புல்லாணி கோயிலை வந்தடைந்தது. இரவில் சந்திர பரப்பை வாகனத்தில் புறப்பாடு நடந்தது. நாளை வானமாமலை மடத்தில் உபய நாச்சியார்களுடன் பெருமாளுக்கு விடை ஏற்றி உற்ஸவம் நடக்கிறது. நாளை உற்ஸவ சாந்தியுடன் விழா நிறைவடைகிறது.