தமிழகத்தில் கூட்டணி ஆட்சி: பஞ்சாங்க கணிப்பால் கட்சிகள் திக் திக்
சிதம்பரம்: தமிழகத்தில், 2026ல் கூட்டணி ஆட்சி தான் என, ஆற்காடு பஞ்சாங்கத்தில் சொல்லப்பட்டுள்ளது.
வரும் 23ம் தேதி, சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில், தற்போது, பராபவ ஆண்டு ஆற்காடு பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல், பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது. அதில், இந்த ஆண்டு நடைபெற உள்ள பல்வேறு விஷயங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், தமிழக அரசியல் குறித்து ஒரு குறிப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு கருத்துக் கணிப்புகள், ஒரு கட்சி பெரும்பான்மை பெற்று ஜெயிக்கும் என கூறப்பட்டு வரும் நிலையில், பஞ்சாங்கத்தில், உலகளாவிய அரசியலில் பல மாற்றங்கள் ஏற்படும். தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகளில், எதிர்பார்த்த வெற்றி யாருக்கும் கிடைக்காது. கூட்டணி ஆட்சியே அமையும் என கூறப்பட்டுள்ளது. அந்த வகையில், கருத்துக் கணிப்பு ஜெயிக்குமா, பஞ்சாங்கத்தில் சொல்லப்பட்டுள்ள கணிப்பு ஜெயிக்குமா என அறிய, அடுத்த மாதம் வரை பொறுத்திருக்க வேண்டும்.