ஆதி சங்கராச்சாரியார் ஜெயந்தி மஹோத்ஸவம்: சிருங்கேரியில் மகா ரதோற்சவம்
சிருங்கேரி: சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு இன்று மகா ரதோற்சவம் சிறப்பாக நடைபெற்றது. ஸ்ரீபாரதி தீர்த்த மகாசுவாமிகள் பங்கேற்று வழிபாடு செய்தார்.
சனாதன தர்மத்தைப் பின்பற்றுபவர்களாகத் திகழ்வதற்கு, பரமசிவனின் அவதாரமான ஜகத்குரு ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியாரின் அயராத முயற்சிகளே ஒரே காரணமாகும். பன்னிரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு, அந்தப் பேரருளாளர் (ஆச்சாரியார்), நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, உபநிடதங்களின் சாரமான அத்வைத தத்துவத்தைப் பரப்பினார். தொலைநோக்குப் பார்வையுடன், ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியார் இந்தியாவின் நான்கு திசைகளிலும் நான்கு ஆம்னாய பீடங்களை (மடங்களை) நிறுவினார். இவற்றுள், சிருங்கேரியில் நிறுவப்பட்ட தக்ஷிணாம்னாய ஸ்ரீ சாரதா பீடம், ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியாரின் நேரடி சீடரான ஸ்ரீ சுரேஸ்வராச்சாரியாரிலிருந்து தொடங்கி, ஒருபோதும் தடைபடாத புகழ்பெற்ற குருமார்களின் பரம்பரையைத் தன்னகத்தே கொண்டு சிறந்து விளங்குகிறது. இங்கு இந்த ஆண்டு, ஜகத்குரு சங்கராச்சாரியார் ஸ்ரீ ஸ்ரீ பாரதி தீர்த்த மகாசன்னிதானம் தலைமையில் ஏப்ரல் 18 முதல் ஏப்ரல் 21 வரை சிருங்கேரியில் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் சஷ்டி திதியான இன்று ஜகத்குரு ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியாரின் பிரம்மாண்டமான ரதோற்சவம் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். இன்று மாலையில், வேத விற்பன்னர்களுக்குச் சிறப்புகளும், தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குச் சான்றிதழ்களும் ஜகத்குரு மகாசுவாமிகள் வழங்கி ஆசி வழங்க உள்ளார்.