அச்சிறுபாக்கம் ஆட்சீஸ்வரர் கோவிலில் அதிகார நந்தி சேவை
அச்சிறுபாக்கம்: அச்சிறுபாக்கம் இளங்கிளி அம்மன் உடனுறை ஆட்சீஸ்வரர் கோவிலில், சித்திரை பெருவிழாவையொட்டி நேற்று, அதிகார நந்தி சேவை நடந்தது. அச்சிறுபாக்கத்தில் இளங்கிளி அம்மன் உடனுறை ஆட்சீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சித்திரை பிரம்மோத்சவ திருவிழா, 20ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் மூன்றாவது நாளான நேற்று காலை, இளங்கிளி அம்மனும், ஆட்சீஸ்வரரும், பெரிய அதிகார நந்தியில் எழுந்தருளி, கோபுர தரிசனத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். கோபுரத்திற்கு வெளியே கூடியிருந்த பக்தர்கள், சுவாமியையும், அம்மனையும் தரிசித்தனர். மேலும் உற்சவ மூர்த்திகளான 63 நாயன்மார்களுக்கு, சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனைகளும் நடந்தன. பின் 63 நாயன்மார்கள் வீதி உலா நடந்தது. தொடர்ந்து, அச்சிறுபாக்கம் பஜார் வீதியில் உள்ள சங்கு தீர்த்த குளக்கரை பகுதியில் ஞானசம்பந்தருக்கு அம்பாள் பால்புகட்டும் நிகழ்வாக, திருமுலைப்பால் உத்சவம் நடந்தது.