பலன் பெற தினமும் படியுங்கள்: நிம்மதியான தூக்கத்திற்கு...
திருஞான சம்பந்தரின் இந்த பதிகத்தை தினமும் பாடுங்கள். வீண்செலவு நீங்கும். நிம்மதியான துாக்கம் வரும்.
காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தமை நன்னெறிக்கு உய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொருள் ஆவது
நாதன் நாமம் நமச்சிவாயவே.
நம்புவார் அவர் நாவின் நவிற்றினால்
வம்பு நாள்மலர் வார் மது ஒப்பது
செம்பொன்னார் திலகம் உலகுக்கு எல்லாம்
நம்பன் நாமம் நமச்சிவாயவே.
நெக்குள் ஆர்வம் மிகப் பெருகி நினைந்து
அக்குமாலை கொடு அங்கையில் எண்ணுவார்
தக்க வானவராத் தகுவிப்பது
நக்கன் நாமம் நமச்சிவாயவே.
இயமன் துாதரும் அஞ்சுவர் இன்சொலால்
நயம் வந்து ஓத வல்லார்தமை நண்ணினால்
நியமம்தான் நினைவார்க்கு இனியான் நெற்றி
நயனன் நாமம் நமச்சிவாயவே.
கொல்வாரேனும் குணம் பல நன்மைகள்
இல்லாரேனும் இயம்புவர் ஆயிடின்,
எல்லாத் தீங்கையும் நீங்குவர் என்பரால்
நல்லார் நாமம் நமச்சிவாயவே.
மந்தரம் ஆன பாவங்கள் மேவிய
பந்தனையவர் தாமும் பகர்வரேல்
சிந்தும் வல்வினை செல்வமும் மல்குமால்
நந்தி நாமம் நமச்சிவாயவே.
நரகம் ஏழ் புக நாடினர் ஆயினும்,
உரைசெய் வாயினர் ஆயின் உருத்திரர்
விரவியே புகுவித்திடும் என்பரால்
வரதன் நாமம் நமச்சிவாயவே.
இலங்கை மன்னன் எடுத்த அடுக்கல் மேல்
தலம் கொள் கால்விரல் சங்கரன் ஊன்றலும்,
மலங்கி வாய்மொழி செய்தவன் உய்வகை
நலம் கொள் நாமம் நமச்சிவாயவே.
போதன் போதன கண்ணனும் அண்ணல்தன்
பாதம் தான் முடி நேடிய பண்பராய்
யாதும் காண்பரிது ஆகி அலந்தவர்
ஓதும் நாமம் நமச்சிவாயவே.
கஞ்சி மண்டையர் கையில் உண் கையர்கள்
வெஞ் சொல் மிண்டர் விரவிலர் என்பரால்
விஞ்சை அண்டர்கள் வேண்ட அமுது செய்
நஞ்சுண் கண்டன் நமச்சிவாயவே.
நந்தி நாமம் நமச்சிவாய என்னும்
சந்தையால் தமிழ் ஞானசம்பந்தன் சொல்
சிந்தையால் மகிழ்ந்து ஏத்த வல்லார் எலாம்
பந்த பாசம் அறுக்க வல்லார்களே.