அவிநாசி லிங்கேஸ்வரர் சித்திரை தேர் விழா: பஞ்சமூர்த்திகள் 63 நாயன்மார்களுக்கு காட்சி
அவிநாசி: அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் பஞ்சமூர்த்திகள் 63 நாயன்மார்களுக்கு காட்சியளிக்கும் வைபவம் கோலாகலமாக நடந்தது.
கொங்கு மண்டலத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ கருணாம்பிகை அம்மன் உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் சித்திரை தேர் திருவிழா நடைபெற்று வருகிறது. நேற்று 5ம் நாள் திருவிழாவாக பஞ்ச மூர்த்திகள் 63 நாயன்மார்களுக்கு காட்சியளித்தல் வைபவம் நடந்தது. நேற்று காலை கோவில் உள்ள திருக்கல்யாண உற்சவ மண்டபத்தில் 63 நாயன்மார்களுக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது தொடர்ந்து விநாயக பெருமான், சோமாஸ்கந்தர்,ஸ்ரீ கருணாம்பிகை அம்மன், ஸ்ரீ சுப்பிரமணியர்,ஸ்ரீ சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்தி களுக்கு மகாபிஷேகம் நடைபெற்ற சிறப்பு அலங்காரம் நடந்தது. இரவு 7.45 மணிக்கு மூஷிக வாகனத்தில் விநாயகப் பெருமான், ரிஷப வாகனத்தில் சோமாஸ்கந்தர், காமதேனு வாகனத்தில் ஸ்ரீ கருணாம்பிகை அம்மன், மயில் வாகனத்தில் வள்ளி தெய்வானையுடன் ஸ்ரீ சுப்ரமணியர் மற்றும் ரிஷப வாகனத்தில் ஸ்ரீ சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் கோவில் வெளிப்புற வளாகத்தில் எழுந்தருளினர்.
அதைத்தொடர்ந்து சிவாச்சாரியார்கள் நான்கு வேதங்களையும் ஓதுவாமூர்த்திகள் அவிநாசி தேவாரத்தையும் பாராயணம் செய்ய 63 நாயன்மார்களுக்கு பஞ்ச மூர்த்திகள் காட்சியளிக்கும் வைபவம் கோலாகலமாக அரங்கேறியது. இந்நிகழ்ச்சியை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு "அவிநாசியப்பருக்கு அரோகரா "ஓம் நமச்சிவாய என கோஷமிட்டு மனமுருகி வேண்டி நின்றனர். தொடர்ந்து நான்கு ரத வீதிகள் வழியாக கண்கவரும் வானவேடிக்கையுடன் சுவாமி திருவீதி உலா காட்சி நடைபெற்றது. திருவீதி உலாவின் போது கரூர், திருப்பூர்,கோவை உள்ளிட்ட ஊர்களிலிருந்து வந்திருந்த சிவனடியார்கள் திருக்கயிலாய வாத்தியம் இசைத்தனர். முன்னதாக பஞ்ச மூர்த்திகள் 63 நாயன்மார்கள் வழிபாட்டு குழு அறக்கட்டளை சார்பில், பாதிரி மரத்து அம்மன் கோவில் முன்பு ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.அன்னதானத்தை கோவில் செயல் அலுவலர் சபரீஷ் குமார் மற்றும் முன்னாள் அறங்காவலர்கள் துவக்கி வைத்தனர்.