பரமக்குடி ஈஸ்வரன் கோயிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்
பரமக்குடி: பரமக்குடி ஈஸ்வரன் கோயில் சித்திரை திருவிழாவில் தேரோட்டம் கோலாகலமாக நடந்தது.
விசாலாட்சி அம்பிகா சந்திரசேகர சுவாமி கோயில் சித்திரை திருவிழா ஏப்., 20 கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சுவாமி அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தனர். இதன்படி திக்கு விஜயம், தபசு திருக்கோலம் என அம்மன் அருள் பாலித்தார். ஏப்., 28 நடந்த திருக்கல்யாணத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று காலை 10:00 மணிக்கு சித்திரை தேரோட்டம் ரத வீதிகளில் கோலாகலமாக நடந்தது. தற்போது சந்திர சேகர சுவாமி பிரியா விடை உடன் தனிச் சப்ரத்தில் அமர்ந்தார். விசாலாட்சி அம்மன் தனி தேரிலும், முன்னதாக விநாயகர், முருகன் வள்ளி, தெய்வானை ஒரு தேரிலும் சென்றனர். அப்போது பக்தர்கள் ஹர ஹர, சிவ சிவ கோஷம் முழங்க வடம் பிடித்து இழுத்தனர். வழி நெடுகிலும் தேங்காய் உடைத்து, பிரசாதங்கள் பக்தர்களுக்கு வழங்கினர். மதியம் 1:00 மணிக்கு தேர் நிலையை அடைந்தது. கோயில் முன்பு தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு ரிஷப வாகனத்தில் ரத வீதிகளில் சப்தாவரணம் நடந்தது. நாளை காலை தீர்த்தவாரி, இரவு சிம்மாசனத்தில் வீதி உலா, கொடி இறக்கம் நடக்க உள்ளது. நாளை உற்சவ சாந்தியுடன் விழா நிறைவடையும். இதேபோல் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் நடந்த தேரோட்டத்தில் சுவாமி பிரியா விடையுடனும், மீனாட்சியம்மன் தனித்தேரிலும் பஞ்ச மூர்த்திகளுடன் வலம் வந்தனர். பக்தர்கள் தரிசனம் செய்தனர்.