கட்டட கலைக்கு பெயர் பெற்ற சென்னகேசவா கோவில்
துமகூரு நகரில் இருந்து, 25 கி.மீ., துாரத்தில் உள்ளது அரலுகுப்பே என்ற சிறிய கிராமம். இந்த கிராமத்தில் 4,000 மக்கள் மட்டுமே வசிக்கின்றனர். இந்த கிராமம் இயற்கையின் அழகு மற்றும் பிரமிக்க வைக்கும் கட்டட கலைகளுக்கு பெயர் பெற்றது. இங்கு, 14ம் நுாற்றாண்டில் கட்டப்பட்ட சென்னகேசவா கோவில் உள்ளது.ஹொய்சாளா மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட இக்கோவில், விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்டு உள்ளது. கோவில் வளாகத்தில் பிரதான சன்னதியில், விஷ்ணுவின் சிலை உள்ளது. அதனருகே அவரது துணைவியரான ஸ்ரீதேவி, பூதேவிக்குள் சிலைகள் உள்ளன. கோவிலின் வெளிப்புற சுவர்களில் பல்வேறு கடவுள்கள், புராண உயிரினங்களை சித்தரிக்கும் வகையிலான, சிற்பங்கள் பொறிக்கப்பட்டு உள்ளன. இந்தக் கோவிலின் தனிச்சிறப்பு, கோவில் வளாகத்தில் அமைந்துள்ள படிக்கட்டு கிணறு தான். சடங்கு நோக்கங்களுக்காக அந்தக் கிணறை பயன்படுத்துகின்றனர். கிணற்றில் உள்ள நீரை புனித தீர்த்தமாக பக்தர்கள் கருதுகின்றனர். இதனால், பாத்திரங்களில் கிணற்று தண்ணீரை, வீட்டிற்கு எடுத்துச் செல்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம், இந்த கோவிலில் ஆண்டு திருவிழா நடக்கும். கட்டட கலைக்கு எடுத்துக்காட்டாக இருப்பதால், துமகூரு, மாண்டியா, ஹாசன் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்தவர்களும், அண்டை மாநிலமான ஆந்திராவில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் இக்கோவிலுக்கு வருகை தருகின்றனர். கோவிலின் நடை தினமும் காலை 8:00 முதல் மாலை 5:30 மணி வரை திறந்திருக்கும்.
எப்படி செல்வது?
பெங்களூரில் இருந்து அரலுகுப்பே கிராமம் 137 கி.மீ., துாரம்.
மெஜஸ்டிக்கில் இருந்து துமகூருக்கு கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்கள் அடிக்கடி இயக்கப்படுகின்றன.
துமகூரு பஸ் நிலையத்தில் இருந்து அரலுகுப்பேக்கு டவுன் பஸ்கள் செல்கின்றன.
ரயிலில் சென்றால் துமகூரு ரயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து ஆட்டோ, வாடகை கார்களில் செல்லலாம். -–நமது நிருபர்–