கரிய காளியம்மன் கோவில் விழா: குதிரை வாகனத்தில் அம்மன் உலா
கருமத்தம்பட்டி: கிட்டாம்பாளையம் ஸ்ரீ கரிய காளியம்மன் கோவிலில் நடந்த பூச்சாட்டு பொங்கல் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
கருமத்தம்பட்டி அடுத்த கிட்டாம் பாளையத்தில் உள்ள ஸ்ரீ. கரிய காளியம்மன் கோவில் பழமையானது. இங்கு, பூச்சாட்டு மற்றும் பொங்கல் திருவிழா கடந்த, 28 ம்தேதி மாலை, விநாயகர் வழிபாடு மற்றும் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் அம்மனுக்கு அபிஷேக, அலங்கார பூஜை மற்றும் மாவிளக்கு நெய்வேத்திய பூஜைகள் நடந்தன. நேற்று கரகம் ஜோடித்தல், கரகம் அழைத்து வருதல், படைக்கலம் எடுத்து வருதலும் நடந்தது. இன்று காலை, 4:00 மணிக்கு அம்மன் அழைத்தலும், குதிரை வாகன ஊர்வலம் நடந்தது. காலை, 8:00 மணிக்கு மாவிளக்கு ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. நாளை மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.