உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காலத்தால் அழியாத பாரதத்தின் ஆன்மிக உணர்வு சோம்நாத் கோவில்

காலத்தால் அழியாத பாரதத்தின் ஆன்மிக உணர்வு சோம்நாத் கோவில்

குஜராத் மாநிலத்தில், அரபி கடலோரம், கடந்த 1951- மே 11ல், நாட்டின் அப்போதைய ஜனாதிபதி டாக்டர் ராஜேந்திர பிரசாத்தால் புதுப்பிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது சோம்நாத் கோவில். கோவில் புதுப்பிப்பின் 75 ஆண்டுகள் நிறைவைக் குறிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சியில் பங்கேற்க கிடைத்துள்ள வாய்ப்பு எனக்கு மனநிறைவு தருவதாக உள்ளது. இதேபோல், சோம்நாத் கோவிலின் மீது நடத்தப்பட்ட முதல் தாக்குதல் சம்பவம் நிகழ்ந்து, 1,000 ஆண்டுகள் நிறைவடைவதைக் குறிக்கும் வகையில் நடந்த சோம்நாத் சுவாபிமான் பர்வ் என்ற சோம்நாத் சுயமரியாதைத் திருவிழாவில் பங்கேற்கும் பாக்கியமும் எனக்கு கிடைத்தது. சோம்நாத் கோவில் ஒரு நாகரிகம் சார்ந்த செய்தியை நமக்கு வழங்குகிறது. அந்த கோவிலின் முன்னால் பரந்து விரிந்து கிடக்கும் கடல், காலங்களை கடந்த நிதர்சனத்தை நமக்கு உணர்த்துகிறது. அதாவது, புயல்கள் எவ்வளவு சீற்றத்துடன் வீசினாலும், அலைகள் எவ்வளவு கொந்தளிப்புடன் எழுந்தாலும், ஒருவரால் எப்போதும் கண்ணியத் துடனும் வலிமையுடனும் மீண்டும் எழுந்து நிற்க முடியும் என்பதே அந்த நிதர்சனம்.


தெய்வீக திருத்தலமான சோம்நாத் கோவிலில், ஒருமுறை வலம் வருவது பூமியை வலம் வருவதற்கு சமமாக கருதப்படுகிறது. மக்கள் இந்த கோவிலுக்கு வந்து வழிபடுவது, நம் நாகரிக விழுமியங்களை அனைவருக்கும் உணர்த்துவதாக அமைந்துள்ளது. கொடுங்கோன்மைக்கு எதிராக உறுதியான நிலைப்பாட்டுடன் போராடிய ஏராளமான மாமனிதர்களை நினைவுபடுத்த வேண்டிய தருணம் இது. கடந்த 1940களில், நாடு சுதந்திரம் அடைய வேண்டும் என்ற உணர்வு பரவிக்கொண்டிருந்த சூழலில், சர்தார் வல்லபபாய் படேல் போன்ற ஆளுமைமிக்க தலைவர்களின் தலைமையில் புதிய அரசுக்கான அடித்தளம் அமைக்கப்பட்டு வந்தது.  அந்நிலையில், இந்த சோம்நாத் கோவிலை புனரமைக்க வேண்டும் என்ற நினைவு அவரது மனதில் இருந்தது. பின், 1947 நவம்பர் 13-ம் தேதி தீபாவளி திருநாளில், சிதிலமடைந்த சோம்நாத் கோவிலின் இடிபாடுகளுக்கு இடையே நின்று, இந்த கோவில் மீண்டும் புனரமைக்கப்பட வேண்டும் என்று உறுதிபூண்டார். சர்தார் படேலின் இந்த அறைகூவலுக்கு குஜராத் மக்கள் மட்டுமின்றி, நாடு முழுதும் இருந்தும் மக்களின் பேராதரவு கிடைத்தது. இதையடுத்து, 1951ல் கோவில் கட்டுமான பணிகள் நிறைவடைந்து, அதன் திறப்புவிழாவில் ஜனாதிபதி டாக்டர் ராஜேந்திர பிரசாத் பங்கேற்றார். இந்த விழா வரலாற்றுச் சிறப்புமிக்கதாக அமைந்தது.


சோம்நாத் கோவிலை புனரமைக்க வேண்டும் என்ற சர்தார் படேலின் கனவை நனவாகியது போல், சோம்நாத் முதல் காசி வரை; காமாக்கியா முதல் கேதார்நாத் வரை; அயோத்தி முதல் உஜ்ஜைன் வரை; திரிம்பகேஸ்வரர் முதல் ஸ்ரீசைலம் வரை, நம் ஆன்மிக தலங்களை நவீன வசதிகளுடன் அதன் பாரம்பரியம் மாறாமல் பாதுகாக்க வேண்டிய வாய்ப்பு எங்களுக்கு கிடைத்துள்ளது. இந்த ஆன்மிக சிறப்பு வாய்ந்த தருணத்தில், ஒவ்வொரு இந்தியரையும் சோம்நாத் கோவிலுக்கு சென்று பார்வையிட வேண்டும் என்று வேண்டுகிறேன். சோம்நாத் கோவிலின் கடற்கரையில் நிற்கும்போது, அதன் தொன்மையான காலத்தின் எதிரொலிகள் உங்களுடன் பேசுவதை உணர முடியும். சோம்நாத் கோவில் பாரதத்தின் வெல்ல முடியாத ஆன்மிக உணர்வுகளின் அனுபவமாக நிலைத்திருக்கும். - நரேந்திர மோடி - பாரத பிரதமர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !