சென்னனுார் ராதாகிருஷ்ணர் கோயிலில் மண்டல அபிஷேகம் நிறைவு
கோவை: சென்னனுார் ஸ்ரீ ராதாகிருஷ்ணர் கோயில் அஷ்டபந்தன மஹாசம்ப்ரோக் ஷண விழா ஏப்.,12 ல், ஸ்ரீவில்லிபுத்துார் சடகோப ஜீயர் ஸ்வாமிகள் தலைமையில் நடந்தது. தொடர்ந்து மண்டல அபிஷேக பெருவிழா, 24 நாட்களாக நடந்தது. ஒவ்வொரு நாளும் சுவாமிக்கு திருமஞ்சனமும் அபிஷேகமும் அன்னதானமும் நடந்தது. மண்டல அபிஷேகத்தின் நிறைவு நாளான நேற்று சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவத்தை லட்சுமிநாராயண வேணுகோபால சுவாமி கோயில் கொங்கிலாச்சான் அப்பண்ணாசாரிசுவாமிகள் நிகழ்த்தி வைத்து பேசுகையில்,‘‘ பெருமாளுக்கு திருக்கல்யாணத்தை கொண்டாடுவது ஒரு புனித நிகழ்வு. திருமண தடைகள் நீங்கவும், பக்தர்கள் மகிழ்ச்சியான வாழ்க்கை அருளவும் இவ்வைபவம் நடத்தப்படுகிறது,’’ என்றார். கோயில் முன் மண்டபத்தில் உற்சவர் ஸ்ரீதேவி பூதேவி கஸ்துாரி ரங்கநாதர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளுவிக்கப்பட்டார். யாகசாலை அமைத்து அக்னி எழுந்தருளச்செய்து, ஸ்வாமிக்கு ஸ்நபன திருமஞ்சனமும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. திருக்கல்யாணத்துக்கு புத்தாடை சமர்ப்பித்தல், மாங்கல்யம் அணிவித்தல், மாலை மாற்றுதல். தேங்காய் உருட்டுதல், அம்மிமிதித்தல், மொய் சமர்பித்தல் விருந்து உபசரித்தல், சுவாமி வீதிஉலா. திவ்யநாமசங்கீர்த்தனம், கலை நிகழ்ச்சிகளுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.