கூராங்கோட்டை தர்ம முனீஸ்வரர் கோயிலில் வருடாந்திர உற்ஸவம்
சாயல்குடி: சாயல்குடி அருகே கூராங்கோட்டை தர்ம முனீஸ்வரர் கோயில் பழமையும் புரதான சிறப்பும் கொண்டதாகும்.
இங்கு கடந்த மே 1., அன்று கோயில் வளாகத்தில் கணபதி ஹோமம், கொடியேற்றம், காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. நேற்று இரவு 7:00 மணிக்கு தர்ம முனீஸ்வரர் புஷ்ப அலங்காரத்துடன் பச்சைப் பல்லக்கில் வெள்ளியிலான தாமரை, திரிசூலம், திருப்பாதங்களுடன் வேட்டை மார்க்கமாக மலட்டாற்று பகுதியில் உள்ள குண்டாற்று கரைக்கு சுத்த பரிபாலனம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இரவில் தெம்மாங்கு கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடந்தது. நேற்று காலை 5:00 மணிக்கு கோட்டை விநாயகர், பாலமுருகன், கோட்டை கருப்பசாமி, வீரமாகாளி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுடன் தர்ம முனீஸ்வரருக்கு குண்டாற்று பகுதியில் தீர்த்தவாரி உற்ஸவம் நடந்தது. நேர்த்திக்கடன் பக்தர்கள் பால்குடம், காவடி, அக்னிசட்டி உள்ளிட்டவைகளை எடுத்து கோயிலை வந்து அடைந்தனர். மூலவருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கூராங்கோட்டை தர்ம முனீஸ்வரர் கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.