தமிழக முதல்வர் ஜோசப் விஜய்க்கு தருமபுரம் ஆதீனம் வாழ்த்து
மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதீனம் 27 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் வெளியிட்டுள்ள ஆசியுரையில் கூறியிருப்பதாவது:
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களுக்கு இனிய வாழ்த்துகளும், ஆசிகளும்!
தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தங்களின் ஆட்சி, தமிழக வரலாற்றில் நீங்காத இடம்பிடிக்க எம் மனமார்ந்த வாழ்த்துகள்.
‛வையத்து வாழ்வீர் எனத் தொடங்கி, மன்னுயிர் அனைத்தையும் தன்னுயிர் போல் கருதும் உயரிய அறமே சிறந்த ஆட்சியின் இலக்கணம் அந்த வகையில் சாதி, மத இனப் பாகுபாடுகளைக் கடந்து விளிம்பு நிலை மக்களின் வாழ்வில் ஏற்றம் தரும் உன்னத மக்கள் நாயகராகத் தாங்கள் திகழ வேண்டுகிறோம்.
தன்னால் தன்பரிசனத்தால் ஊனமிகு பகைத்திறத்தால் கள்வரால் உயிர்கள் தம்மால் ஆன ‛பயம் தீர்த்து அறங்காப்பான்" என்ற சேக்கிழார் பெருமானின் புனித வாக்கிற்கிணங்க இயற்கைச் சீற்றங்கள் சமூக விரோதச் செயல்கள் மற்றும் எவ்விதப் பகை உணர்வுகளுமின்றி மக்கள் அச்சமின்றி வாழும் சூழலைத் தாங்கள் உருவாக்கித் தருவீர்கள் என முழுமையாக நம்புகிறோம்.
தமிழக மக்களின் கண்ணும் ஆவியுமாக இருந்து ஒரு தாயின் கனிவோடும் தந்தையின் பொறுப்போடும் அறநெறி தவறாத செங்கோல் ஆட்சியை வழங்க. எல்லாம் வல்ல செந்தமிழ்ச் சொக்கன் திருவருள் தங்களுக்கு என்றும் துணை நிற்கட்டும்.
தங்கள் அமைச்சரவையும் தங்களுக்கு உற்ற துணையாக நின்று, பொதுநலனை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட எம் ஆசிகள் என தனது ஆசியுரையில் தருமபுரம் ஆதீனம் வாழ்த்தியுள்ளார்.