சீர்காழி சட்டை நாதர் சுவாமி கோயிலில் 63 நாயன்மார்களுக்கு சிறப்பு வழிபாடு
மயிலாடுதுறை: சீர்காழி சட்டை நாதர் சுவாமி கோயிலில் 63 நாயன்மார்களுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தருமபுரம் ஆதீனம் பங்கேற்று தரிசனம் செய்தார்,
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான சட்டைநாதர் சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் சிவபெருமான் பிரம்மபுரீஸ்வரர், தோனியப்பர் சட்டை நாதர் என மூன்று நிலைகளில் எழுந்தருளி அருள் பாலிக்கிறார். இங்கு வைகாசி மாத பிறப்பையொட்டி சிறப்பு கோபூஜை வழிபாடு நடந்தது. மாசிலாமணி நிலையத்தில் நடந்த கோபூஜையில் தருமபுரம் ஆதீனம் 27வது குருமா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் பங்கேற்று கோபூஜை செய்து வழிபாடு செய்தார். பின்னர் கொடிமரத்து விநாயகர், நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரம், மகா தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து கோ சாலையிலிருந்து வரவழைக்கப்பட்ட பசு மாடு, கன்றுக்கு சிறப்பு வழிபாடு செய்து தீபாராதனை காட்டி கோபூஜை வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பசுமாட்டிற்கு வாழைபழங்கள், அகத்திக்கீரை கொடுத்து வலம் வந்து வணங்கி வழிபட்டனர். இதேபோல் பிரம்மபுரீஸ்வரர் சன்னதி பிரகாரத்தில் அமைந்துள்ள காட்சி கொடுத்த நாயகர் உள்ளிட்ட 63 நாயன்மார்களுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தேவாரத் திருப்பதிகங்கள் பாடி பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.