மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் அமைச்சர் ஆனந்த் சாமி தரிசனம்
செஞ்சி: மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் அமைச்சர் ஆனந்த் சாமி தரிசனம் செய்தார்.
த.வெ.க., பொதுச் செயலாளர், ஊரக வளர்ச்சி மற்றும் நீர் வளத்துறை அமைச்சர் ஆனந்த் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் குலதெய்வ வழிபாடு நடத்தினர். மேல்மலையனூர் அங்காளம்மன் பக்தரான இவர், அடிக்கடி அங்காளம்மனை தரிசனம் செய்வதை வழக்கமாக கொண்டவர். கடந்த மாதம் அமாவாசையன்று மேல்மலையனூரில் நடந்த ஊஞ்சல் உற்சவத்தின் போது த.வெ.க., வேட்பாளர் பட்டியலை அம்மன் முன் வைத்து தீபாராதனை காட்டி எடுத்து சென்றார். தேர்தலில் த.வெ.க., வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள நிலையில் அமாவாசை தினமான இன்று மதியம் அமைச்சர் ஆனந்த் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பளித்தனர். சாமி தரிசனம் முடிந்ததும் பிரசாதம் வழங்கினர். பின்னர் கோவில் அலுவலகத்தில் இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் சிவலிங்கம், உதவி ஆணையர் சக்திவேல், அறங்காவலர் குழு தலைவர் ஏழுமலை மற்றும் அதிகாரிகள், கோவில் ஊழியர்களுடன் கலந்துரையாடினார்.