பக்தர்கள் திருப்தியே முக்கியம் அதிகாரிகளுக்கு அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் அறிவுரை
சென்னை: ‘‘நம் பாரம்பரியம் மற்றும் கலாசாரத்தை பாதுகாக்கும் வகையிலும், பொது மக்கள் மற்றும் பக்தர்கள் முழு திருப்தியடையும் வகையிலும் செயல்பட வேண்டும்,’’ என, அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் வலியுறுத்தினார்.
தமிழக அறநிலையத் துறை அமைச்சராக, ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ., ரமேஷ் பொறுப்பேற்றுள்ளார். சென்னை, நுங்கம்பாக்கம், அறநிலையத் துறை தலைமையகத்திற்கு நேற்று அவர் சென்றார். அங்கு துறை வாயிலாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், அவற்றின் செயல்பாடுகள் குறித்தும், தற்போது நடந்து வரும் திருப்பணிகள், மேம்பாட்டு பணிகள், பெருந்திட்ட வரைவு பணிகள் குறித்தும், அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
பின், அமைச்சர் ரமேஷ் கூறியதாவது: உறுதியான, நம்பிக்கையான, துாய்மையான நிர்வாகத்தை வழங்க வேண்டும் என, முதல்வர் உறுதி அளித்துள்ளார். அதை முழுமையாக பின்பற்ற வேண்டும். உயர் அலுவலர்கள் முதல் கோவில் கடைநிலை பணியாளர்கள் வரை, சேவை மனப்பான்மையோடு பணியாற்ற வேண்டும். நம் பாரம்பரியம் மற்றும் கலாசாரத்தை பாதுகாக்கும் வகையிலும், பொது மக்கள் மற்றும் பக்தர்கள் முழு திருப்தியடையும் வகையிலும், நம் செயல்பாடுகள் அமைய, அனைத்து அலுவலர்களும், பணியாளர்களும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். கோவில் நிர்வாகம் தொடர்பாக, எவ்வித குறைபாடுகளும் எழாத வகையில், நமது செயல்பாடுகளை அமைத்துக் கொள்வதோடு, பக்தர்கள் முழு மனநிறைவோடு இறை தரிசனம் பெறும் வசதிகளை உருவாக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.