உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் /  காஞ்சிபுரம் வரதர் கோவிலில் சேஷ வாகன தடி முறிந்ததால் பக்தர்கள் அதிருப்தி

 காஞ்சிபுரம் வரதர் கோவிலில் சேஷ வாகன தடி முறிந்ததால் பக்தர்கள் அதிருப்தி

 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி பிரம்மோத்சவத்தின் நான்காவது நாளான இன்று காலை, சேஷ வாகன உத்சவத்தின்போது, சுவாமியை துாக்கி செல்ல பயன்படுத்தப்படும் தடி முறிந்ததால், வீதியுலா ரத்து செய்யப்பட்டது. புதிய தடி பொருத்தியும் வீதியுலா நடக்காததால், பக்தர்கள் அதிருப்தியடைந்தனர்.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோத்சவ விழா, கடந்த 28ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை, மாலையில் சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வருகிறார். மூன்றாம் நாள் உத்சவமான நேற்று காலை கருடசேவை உத்சவமும், மாலை ஹனுமந்த வாகன உத்சவமும் விமரிசையாக நடந்தது.

நான்காம் நாள் உத்சவமான இன்று காலை சேஷ வாகனத்தில், நாச்சியார் திருக்கோலத்தில் வரதராஜ பெருமாள் எழுந்தருளினார். காலை 8:00 மணிக்கு, பல்லக்கில் கோவில் இருந்து சுவாமி வீதியுலா புறப்பட்டது. சன்னிதி தெருவில் இருந்து சி.எஸ்.செட்டி தெருவில் சென்றபோது, சுவாமி துாக்கி செல்ல பயன்படுத்தப்படும் மரத்தால் ஆன தடி திடீரென முறிந்தது. இதில், சுவாமிக்கும், சுவாமியை துாக்கிச் சென்ற கோடியகாரர்கள் எனும் பாதம் தாங்கிகளுக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.  இதையடுத்து கோவிலில் இருந்து மற்றொரு பழைய தடி எடுத்து வரப்பட்டு பொருத்தம் பணி காலை 9:30 மணி வரை நடந்தது. அப்போது, வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், சுவாமி வீதியுலா ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, வரதராஜ பெருமாள் வீதியுலா செல்லாமல் காலை 10:00 மணிக்கு கோவிலில் எழுந்தருளினார். காலை 11:30 மணி வரை சேஷ வாகனத்தில் எழுந்தருளிய வரதராஜ பெருமாளை தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இன்று காலை சுவாமி வீதியுலாவின்போது தடி முறிந்து, வீதியுலா ரத்து செய்யப்பட்டது பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !