கும்பாபிஷேக கோபுரங்களை தரிசிப்பது மனச்சுமையை நீக்கும்: ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்
சென்னை: கும்பாபிஷேகத்தின்போது கோவில் கோபுரங்களை தரிசிப்பது, கடவுள் வழிபாடு செய்வது மக்களின் மனச்சுமையை நீக்கி நன்மை கொடுக்கும் என காஞ்சி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கூறினார்.
சென்னை பெசன்ட் நகர் ஊரூர் குப்பம் - ஆல்காட் குப்பம் பகுதியில் ஸ்ரீதேவி எல்லையம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகம் நேற்று காலை 7:00 மணிக்கு நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற காஞ்சி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கலச பூஜையை துவக்கி வைத்து வேத மந்திரங்கள் முழங்க, கோபுரத்திற்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினார். தொடர்ந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.
பின் அவர் பேசியதாவது: தேச நலன், ஒற்றுமை, மன அமைதிக்கு அடிப்படையாக ஆன்மிகம் விளங்குகிறது. கும்பாபிஷேகத்தின்போது கோவில் கோபுரங்களை தரிசிப்பது, கடவுள் வழிபாடு செய்வது மக்களின் மனச்சுமையை நீக்கி நன்மை கொடுக்கும். தர்ம நெறிபடி வாழ, கல்வி, ஆன்மிக அறிவை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். இளைய தலைமுறைகள் பாரம்பரியம், கலாசாரம், ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு காட்டுவதுடன் சமுதாய பணி செய்ய வேண்டும். நல்ல எண்ணங்களை உருவாக்குவதே சிறந்த தர்மம். பக்தி தான் மூலை முடுக்கெல்லாம் பரவி தேசத்தை பலப்படுத்தியது. ஆன்மிகம் ஒற்றுமை, சமூக நற்பண்புகளை வளர்க்கக்கூடியது. அதற்கு ஏற்ப மக்கள் மனங்களை தயார் செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு காஞ்சி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பேசினார். கும்பாபிஷேக நிகழ்ச்சியை திருப்பணிக்குழு, பஞ்சாயத்தார்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் முன்னின்று நடத்தி னர்.