சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனித்திருமஞ்சன விழா நாளை துவக்கம்
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவில் ஆணி திருமஞ்சன தரிசன விழா நாளை கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது.
கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் உள்ள உலகப் புகழ் பெற்ற, பூலோக கைலாயம் என்றழைக்கப்படும் நடராஜர் கோயிலில், ஆனித்திருமஞ்சன தரிசன உற்சவம் நாளை காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. பத்து நாட்கள் நடைபெறும் இந்த உற்சவத்தை தொடர்ந்து, தினமும் பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலா நடைபெறும். 14 ம் தேதி சந்திர பிரபை வாகன வீதி உலா, 15 ம் தேதி தங்க சூரிய பிரபை வாகன வீதிஉலா, 16 ம் தேதி வெள்ளி பூதவாகன வீதிஉலா, 17 ம் தேதி வெள்ளி ரிஷப வாகன வீதி உலா (தெருவடைச்சான்), நடைபெறுகிறது. தொடர்ந்து 18 ம் தேதி வெள்ளி யானை வாகன வீதி உலாவும்,19 ம் தேதி தங்க கைலாச வாகன வீதிஉலாவு, 20 ம் தேதி தங்க ரதத்தில் பிச்சாண்டவர் வீதி உலாவும் நடைபெற உள்ளது. முக்கிய விழாவான தேர் திருவிழா வரும், 21ம் தேதியும், 22 ஆம் தேதி தரிசன விழாவும் நடைபெற உள்ளது. தேர் திருவிழா என்று தேர் வீதி உலா முடிந்த பின்பு அன்று இரவு 8 மணிக்கு, தேரிலிருந்து நடராஜர் சிவகாமசுந்தரி இறங்கி கீழ சன்னதி வழியாக ஆயிரம் கால் மண்டபத்தில் எழுந்தருளி செய்து, ஏக கால லட்சார்ச்சனை நடைபெறும். அதனைத் தொடர்ந்து தரிசன விழா நடைபெறும் 22 ஆம் தேதி அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு, ஆயிரங்கால் முன்முகப்பு மண்டபத்தில் நடராஜர் மற்றும் சிவகாமசுந்தரிக்கு மகா அபிஷேகம் நடைபெறும். அதனைத் தொடர்ந்து காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜையும், பின்னர் மதியம், பஞ்சமூர்த்தி வீதிஉலா சென்று வந்த பின், சுமார் 3 மணிக்கு மேல் ஆனித்திருமஞ்சன தரிசனம் தரிசனம் நடைபெற உள்ளது. அதன் பின்னர் ஞானகாச சித்சபா பிரவேசம் நடைபெறும். 23 ம் தேதி பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதிஉலாவுடன் உற்சவம் நிறைவடைகிறது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோயில் பொதுதீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.