உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 12ம் நுாற்றாண்டு தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவிலில் 22 ஆண்டுக்கு பிறகு கும்பாபிஷேக பணிகள் துவக்கம்

12ம் நுாற்றாண்டு தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவிலில் 22 ஆண்டுக்கு பிறகு கும்பாபிஷேக பணிகள் துவக்கம்

தஞ்சாவூர், கி.பி.,12ம் நுாற்றாண்டில், இரண்டாம் ராஜராஜ சோழனால், கட்டப்பட்ட தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவிலில், 22 ஆண்டுக்கு பிறகு கும்பாபிஷேகம் செய்வதற்கான பாலாலயம் துவங்கியது. 

தஞ்சாவூர் மாவட்டம், தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவில், கி.பி.12ம் நுாற்றாண்டில், இரண்டாம் ராஜராஜசோழனால் கட்டப்பட்டது. இக்கோவிலில் கலைநுணுக்க வேலைபாடுகளுடன் கூடிய ஆயிரக்கணக்கான சிற்பங்கள் உள்ளன. யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற இக்கோவில், இந்திய தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.  

இக்கோவிலில், கடந்த 2004ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பிறகு கும்பாபிஷேகம் இன்றியும், பிராதன நுழைவு வாயில் சிதைந்து காணப்பட்டன. இந்நிலையில், பல்வேறு இந்து அமைப்புகள், தன்னார்வலர்கள், பக்தர்கள் கோரிக்கையை ஏற்று, கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து திருப்பணியை துவங்கும் விதமாக, கடம்புறப்பாடு,  விமானபடத்திற்கு கலசாபிஷேகமும், யாகசாலை பூஜையுடன் விமான பாலாயம் நடந்தது. இதில் அய்யர்மலையை சேர்ந்த ராஜலிங்க சுவாமிகள்,  அரண்மனை தேவஸ்தான் செயல் அலுவலர் சுந்தரராஜன்,  அறநிலையத்துறை ஆய்வாளர் சுதா, சிவாச்சாரியார்கள் மற்றும் பக்தர்கள் கலந்துக்கொண்டனர். 

தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே நிருபர்களிடம் கூறியதாவது: கோவில் கும்பாபிஷேகத்தை வரும் தை மாதத்தில் செய்ய வேண்டும் என மக்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். அதற்குள்ளாக திருப்பணிகளை தொல்லியல்துறையுடன் இணைந்து முடிக்க திட்டமிட்டுள்ளோம்.  கோவிலை சுற்றி பாதுகாப்பு வசதிக்காக சி.சி.டி.வி., கேமராக்கள் அமைக்க வேண்டும். குடிநீர், மற்றும் கழிப்பிட வசதிகளை அதிகப்படுத்த வேண்டும். பார்க்கிங், காலணிகள் பாதுகாக்கும் இடம், கோவில் மடப்பள்ளி சீரமைப்பு போன்ற பணிகளை செய்ய வேண்டும் என தொல்லியல்துறையினரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !