பட்டத்து அரசி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் ராக்கியாபாளையத்தில் கோலாகலம்
திருப்பூர்; திருப்பூர், காங்கயம் ரோடு, ராக்கியாபாளையத்தில் உள்ள ஸ்ரீபட்டத்து அரசி அம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடந்தது.
இக்கோவிலை, ராக்கியாபாளையம் மற்றும் கணபதிபாளையம் மக்கள் வழிபட்டு வருகின்றனர். கடந்த 14-ம் தேதி தீர்த்தக்குடம் மற்றும் முளைப்பாரி ஊர்வலத்துடன் கோவில் கும்பாபிேஷக விழா துவங்கியது. சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள், பன்னிரு திருமுறை பண்ணிசை முழங்க, கால பூஜைகள் நடந்தேறின. இன்று அதிகாலை 4:30 மணிக்கு, நான்காம் கால வேள்வி பூஜைகள் நிறைவடைந்ததும், யாகசாலையில் இருந்து புனித நீர் அடங்கிய கலசங்கள் புறப்பாடு நடைபெற்றது.
மங்கள இசை முழங்க, ஆன்மிகப் பெரியோர்கள் மற்றும் ஏராளமான பக்தர்களின் பக்தி முழக்கங்களுக்கு மத்தியில் காலை 6:00 மணிக்கு மஹா கும்பாபிஷேகம் நடந்தது. கோபுர விமான கலசங்களுக்கும், தொடர்ந்து மூலவர் பட்டத்தரசி அம்மன், வலம்புரி விநாயகர், பாலமுருகன், மாசி அய்யன், துர்க்கையம்மன், நவகிரஹம், துவாரசக்தி, கன்னிமார், கருப்பண்ண சாமி ஆகிய பரிவார தெய்வங்களுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது. பக்தர்களுக்குப் பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டன. இன்று முதல் அடுத்த 48 நாட்களுக்குத் தொடர்ந்து மண்டல பூஜைகள் நடைபெற உள்ளன. பந்தநல்லுார் நாட்டியாலயா குழுவின் பரதநாட்டிய நிகழ்ச்சி மற்றும் பாரம்பரிய வள்ளிகும்மி ஆட்டம் நடைபெற்றன. நடுவர் ஞானசம்பந்தன் தலைமையில், ‘பக்தி நெறியை பெரிதும் வளர்ப்பவர்கள் ஆண்களா? பெண்களா?’ என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. ஏற்பாடுகளை கோவில் டிரஸ்ட் நிர்வாகிகள், திருப்பணி கமிட்டியினர் மற்றும் ஊர்ப் பொதுமக்கள் செய்திருந்தனர்.