திருத்தணி: ராஜகோபுரம் இணைப்பு பணி பேராசிரியர்கள் குழு ஆய்வு
திருத்தணி: திருத்தணி முருகன் மலைக்கோவிலில் நடைபெறும் ராஜகோபுரம் இணைப்பு, தேர்வீதி விரிவாக்கம் போன்ற பணிகளை, கரைக்கால் பேராசிரியர்கள் நேற்று ஆய்வு செய்தனர்.
திருத்தணி முருகன் கோவிலில், ராஜகோபுரம் இணைப்பு பணி, தேர் வீதி விரிவாக்கம் மற்றும் புதிய ஐந்து நிலை கோபுரம் கட்டும் பணிகளை, புதுச்சேரி என்.ஐ.டி., குழுவினர் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று காரைக்கால் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லுாரி தலைமை பேராசிரியர் மாடப்பா தலைமையில் வந்த பேராசிரியர் குழுவினர், கோவில் பணிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது, கோவில் அறங்காவலர் குழு தலைவர் ஸ்ரீதரன், இணை ஆணையர் ரமணி, அறங்காவலர்கள் சுரேஷ்பாபு, மோகனன், நாகன் ஆகியோர், அவர்களிடம் பணிகள் குறித்து விளக்கினர்.
பின், ராஜகோபுரம் இணைப்பு பணிகள், தேர் வீதி விரிவாக்கம், புதிதாக ஐந்து நிலை கோபுரம் கட்டும் பணிகளை ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என, என்.ஐ.டி., குழுவினருக்கு அறிவுறுத்தினர்.