உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அயோத்தி ராமர் கோவில் நிர்வாகிகளின் ராஜினாமா ஏற்பு!

அயோத்தி ராமர் கோவில் நிர்வாகிகளின் ராஜினாமா ஏற்பு!

அயோத்தி: அயோத்தி ராமர் கோவில் நன்கொடை முறைகேடு விவகாரத்தில், ராம ஜென்மபூமி தீர்த்தஷேத்ர அறக்கட்டளை நிர்வாகிகளின் ராஜினாமா ஏற்கப்பட்டு, இடைக்கால செயலராக, ஓய்வு பெற்ற இந்திய வனப்பணி அதிகாரி கிருஷ்ண மோகன் நியமிக்கப்பட்டார்.


உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் உள்ள பிரமாண்ட ராமர் கோவிலை, ராம ஜென்மபூமி தீர்த்தஷேத்ர அறக்கட்டளை நிர்வகித்து வருகிறது.  இங்கு பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகள் மற்றும் நன்கொடைகளில் முறைகேடு நடந்ததாக கடந்த மாதம் புகார் எழுந்தது. கோவிலுக்காக வழங்கப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் மாயமானதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இது குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழுவை உத்தர பிரதேச அரசு அமைத்தது. கோவில் ஊழியர்கள், அறக்கட்டளை நிர்வாகிகள், நன்கொடை வசூலிப்பாளர்கள் உள்ளிட் டோரிடம் விசாரணை நடத்திய குழு, முதற்கட்ட அறிக்கையை அறக் கட்டளை நிர்வாகிகளிடம் வழங்கியது.


ஒப்படைப்பு: இந்த விவகாரத்தில், முன்னாள் பொதுச் செயலர் சம்பத் ராயின் கார் ஓட்டுநர் ராம்சங்கர் யாதவ் உட்பட நன்கொடை வசூலிக்கும் பணியில் இருந்த எட்டு பேர் கைது செய்யப்பட்டனர். முறைகேடு நடந்ததை அடுத்து, பொதுச் செயலராக இருந்த சம்பத் ராய் மற்றும் உறுப்பினர் அனில் மிஸ்ரா ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். இந்த சூழலில், கோவிலை நிர்வகிக்கும் ராம ஜென்மபூமி தீர்த்தஷேத்ர அறக்கட்டளையின் குழு கூட்டம் நேற்று நடந்தது. வரும் 11ம் தேதி நடத்தப்படவிருந்த கூட்டம், நன்கொடை முறைகேடு புகார் காரணமாக முன்கூட்டியே நடத்தப்பட்டது. மூன்று மணி நேரத்துக்கும் மேலாக நடந்த இந்த கூட்டத்தின் போது, புதிதாக நியமிக்கப்பட்ட இடைக்கால பொதுச் செயலர் கிருஷ்ண மோகனிடம் அறக்கட்டளை பணிகள் ஒப்படைக்கப்பட்டன. கூட்டத்துக்கு பின் அறக்கட்டளை பொருளாளர் சுவாமி கோவிந்த் தேவ் கிரி கூறியதாவது: கோவில் நன்கொடை விவகாரத்தில் முறைகேடு நடந்திருப்பதாக கூறப்படு வது மிகுந்த மனவேதனை அளிக்கிறது. அறக்கட்டளையின் விதிமுறைகள்படி, சம்பத் ராய் மற்றும் அனில் மிஸ்ராவின் ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டது.


முறைகேடு காலத்தில் இருவரும் பொறுப்பில் இருந்த நிலையில், விசாரணை காலத்தில் அவர்கள் நீடிப்பது சரியாக இருக்காது என்ற காரணத்தாலேயே ராஜினாமா ஏற்கப்பட்டது. கோவிலுக்கு வழங்கப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் அனைத்தும் பத்திரமாக உள்ளன. எந்த பொருட்களும் மாயமாகவில்லை. மொத்தம் 2,800 பொருட்கள் அடங்கிய நன்கொடை பட்டியல் பதிவேட்டில் உள்ளபடி அனைத்து பொருட்களும் பாதுகாப்பாக உள்ளன. அறக்கட்டளையின் அடுத்த கூட்டம் வரும் 22ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.


இறுதி அறிக்கை: இதற்கு முன்பாகவே சமர்ப்பிக்கப்படும் சிறப்பு விசாரணைக் குழுவின் இறுதி அறிக்கையை ஆய்வு செய்யவும் அறக்கட்டளை முடிவு செய்து உள்ளது. அடுத்த கூட்டத்தில், புதிய அறங்காவலர்கள் மற்றும் நிர்வாகிகள் நியமிக்கப்படுவர். நன்கொடை திருட்டு விவகாரத்தில், குற்றவாளிகள் கண்டறியப்பட்டு தண்டனை வழங்குவதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். நன்கொடை முறை கேட்டை காரணம் காட்டி, ராமர் கோவிலுக்கு களங்கம் விளைவிக்கவும், பக்தர்களை பிளவுப்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப் படுகின்றன. அடிப்படையற்ற பேச்சுகளை, வதந்திகளை பக்தர்கள் யாரும் நம்ப வேண்டாம். முறைகேடு குறித்து விளக்கம் பெற விரும்புபவர்கள், அலுவலகத்துக்கு நேரடியாக வந்து ஆவணங்களை பார்வையிடலாம். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில், அறக்கட்டளை தலைவர் மஹந்த் நிருத்ய கோபால் தாஸ், சுவாமி வாசுதேவானந்த சரஸ்வதி, அயோத்தி கலெக்டர் சஷாங்க் திரிபாதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


கிருஷ்ண மோகன் யார்?: இடைக்கால பொதுச் செயலராக நியமிக்கப்பட்டுள்ள கிருஷ்ண மோகன், மஹாராஷ்டிராவின் இந்திய வனப்பணி அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். உத்தர பிரதேசத்தின் ஹர்தோய் மாவட்டத்தில் உள்ள சந்திராபூர் கிராமத்தைச் சேர்ந்த இவர், ஓய்வுக்கு பின் சமூக பணியில் ஈடுபட்டு வருகிறார். முன்னாள் அறங்காவலர் காமேஷ்வர் சவுபாலின் நியமனத்தை தொடர்ந்து, இவருடைய நியமனம், அறக்கட்டளையில் தலித் சமூகத்தின் பிரதிநிதித்துவம் தொடர்வதை உறுதி செய்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !