பள்ளம் தோண்டியபோது 3 அடி உயர விநாயகர் கற்சிலை கண்டெடுப்பு
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் திருக்காலிமேடு, கவரை தெருவில் பாதாள சாக்கடை திட்ட பணிக்காக, நேற்று பள்ளம் தோண்டியபோது விநாயகர் கற்சிலை கண்டெடுக்கப்பட்டது.
காஞ்சிபுரம் மாநகராட்சி சார்பில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக திருக்காலிமேடு கவரை தெருவில் பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டும் பணி நேற்று நடந்தது. அப்போது கற்சிலை ஒன்று தென்பட்டது. இதையடுத்து பள்ளம் தோண்டும் பணியை நிறுத்திய தொழிலாளர்கள், கற்சிலையை பாதுகாப்பாக வெளியே எடுத்தனர். அது மூன்றடி உயர விநாயகர் சிலை என்பது தெரியவந்தது. இதையடுத்து அப்பகுதியினர் விநாயகர் கற்சிலையை கவரை தெருவில் உள்ள நாகாத்தம்மன் கோவிலில் வைத்து பூஜை செய்து வழிபட்டனர்.
இதுகுறித்து காஞ்சிபுரம் அருங்காட்சிய காப்பாட்சியர் உமாசங்கர் கூறியதாவது: திருக்காலிமேட்டில் கண்டெடுக்கப்பட்ட விநாயகர் கற்சிலை, பழமையான சிலை அல்ல. இந்த சிலை மிஷின் கட்டிங்கில் செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் செய்யப்பட்ட சிலை போன்று உள்ளது. இந்த சிலையில், விநாயகரின் தும்பிக்கை, கை பாகங்கள் உடைந்த நிலையில் பின்னமாகி இருந்ததால், சிற்ப சாஸ்திரத்தின்படி பூஜைக்கு ஏற்ற சிலை இல்லை என்பதால், மண்ணில் புதைத்து இருக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.