திருப்பூரில் ஸ்ரீசங்கர விஜயேந்திர ஸரஸ்வதி சுவாமிகள் பக்தர்களுக்கு அருளாசி
திருப்பூர்: -தொழில் வளம் பெருகி, பாரத புண்ணிய பூமி வளம்பெற வேண்டும்; மக்கள் நலம் பெற வேண்டுமென, ஸ்ரீசங்கர விஜயேந்திர ஸரஸ்வதி சுவாமிகள், திருப்பூரில் அருளாசி வழங்கினார்.
ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின், 70வது ஜகத்குரு, ஸ்ரீசங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள், திருப்பூருக்கு நேற்று முன்தினம் விஜயம் செய்தார். காட்டுவளவு ஸ்ரீகாமாட்சியம்மன் கோவிலில் தங்கி, பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வருகிறார். திருப்பூர் வந்த சுவாமிகளை, திருப்பூர் கிளை ஸ்ரீகாஞ்சி காமகோடி மடத்தின் நிர்வாகிகள், ஸ்ரீகாமாட்சியம்மன் கோவில் நிர்வாகிகள், பூர்ண கும்பமரியாதையுடன் வரவேற்றனர். இன்று அதிகாலை கோ பூஜை செய்த சுவாமிகள், ஸ்ரீகாமாட்சியம்மனை வழிபட்டார். தொடர்ந்து, பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். தொடர்ந்து, காலை, 9:30 முதல், 12:00 வரை, வேத பாராயணம் நடந்தது. ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம மற்றும் ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணம் நடந்தது. திருப்பூர் தொழில் துறையினர் ஆசி பெற்றனர். தொழில் வளம் பெருகி, திருப்பூர் மட்டுமல்லாது, தமிழகமும், பாரத பூமியும் வளம்பெற வேண்டும், மக்கள் நலன் பெற வேண்டுமென, சுவாமிகள் அருளாசி வழங்கினார்.
பெங்களூரு ஸ்ரீஸ்ரீகுருகுல மஹா வேத பாடசாலை முதல்வர் சுந்தரமூர்த்தி சிவம் மற்றும் வேதபாடசாலை மாணவர்கள், கொங்கேழு சிவாலயங்களின் பிரசாதங்களை சுவாமிகளுக்கு வழங்கி, அருளாசி பெற்றனர். பக்தர்களுக்கு, தாழம்பூ குங்குமம், லட்டு பிரசாதம் மற்றும் அன்னபிரசாதம் வழங்கப்பட்டது;. ‘சிவ பஞ்சாக்ஷர நக்ஷத்ர மாலாஸ்தோத்ரம்’ என்ற புத்தகம், ‘ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் பொன்மொழிகள்’ என்ற சிறிய புத்தகம் மற்றும் காஞ்சி காமாட்சி அம்மன் திருவுருவப்படம், ஐந்துமுக ருத்ராட்ஷம் ஆகியவை, பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.