உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அம்மன் கோயில்களில் முளைப்பாரி வளர்த்தலில் பெண் பக்தர்கள் ஆர்வம்

அம்மன் கோயில்களில் முளைப்பாரி வளர்த்தலில் பெண் பக்தர்கள் ஆர்வம்

திருப்புல்லாணி: ஜூலை 22–-: கிராமங்கள் மற்றும் நகர் பகுதிகளில் உள்ள முத்துமாரியம்மன் மற்றும் மாரியம்மன் கோயில்களில் முளைக்கொட்டு உற்ஸவங்கள் நடத்தப்படும் நிலையில் பெண்கள் முளைப்பாரி வளர்ப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

மாவட்டத்தில் சித்திரை மாதம் துவங்கி ஆடி மற்றும் ஐப்பசி வரை பெருவாரியாக முளைப்பாரி உற்ஸவங்கள் நடத்தப்படுகின்றன. நடப்பாண்டில் விளைச்சல் நன்றாக இருக்க வேண்டும், மழை பெய்ய வேண்டும் என்ற பொது நல நோக்கோடு வளர்க்கப்படும் முளைப்பாரிகள் ஊர் ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றன. முளைக்கொட்டு திருவிழா ஆரம்பமாக உள்ள அம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்து முத்து எடுக்கப்படும் நிகழ்ச்சி துவங்குகிறது.

முத்து எடுத்தல் என்பது நவதானியங்களுள் ஒன்றான கருப்பு மொச்சையை குறிக்கிறது.

தேர்வு செய்யப்பட்ட கருப்பு மொச்சைகளை பாரிகளின் எண்ணிக்கைக்கு தகுந்தாற் போல் வாங்கி பயன்படுத்துகின்றனர். திருப்புல்லாணி அருகே இந்திரா நகரைச் சேர்ந்த பழனியம்மாள், நாகசாமி ஆகியோர் குழுவாக இயங்கி பாரி வளர்க்கும் சேவையை செய்து வருகின்றனர். இந்த குழுவினர் கூறியதாவது:

திருப்புல்லாணி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பாரி வளர்ப்பதற்கு எங்களுக்கு அழைப்புகள் வரும். அதனடிப்படையில் பத்து நாட்கள் தங்கி இருந்து பாரி வளர்த்து விழா குழுவிடம் ஒப்படைக்கிறோம். முதலில் தென்னை ஓலையால் வேயப்பட்ட இருட்டு அறைப்பகுதி தேவை. அவற்றில் பாரி ஓடுகள் மற்றும் பாத்திரங்களை வரிசையாக வைத்து அவற்றுள் மாட்டுச் சாணம் ஆட்டுப்புழுக்கை உள்ளிட்டவைகளை வைத்து அவற்றின் மீது குறிப்பிட்ட அளவுகளில் முத்து பரப்புகிறோம்.

இவற்றில் சுத்தம் சுகாதாரம் முக்கிய அம்சமாக கருதப்படுகிறது. முறைப்படி விரதம் இருந்து இவற்றை உருவாக்க வேண்டும். பெரும்பாலும் இருட்டு அறையில் வளர்ப்பது சிறந்தது. அப்போது தான் பாரி நன்கு உயரமாகவும், பசுமையாகவும் வளரும். நேரத்திற்கு நல்ல தண்ணீர் விட்டு பராமரிக்க வேண்டும். முளைப்பாரி உற்ஸவத்தின் முதல் செவ்வாய்க்கிழமை வளர்க்கத் துவங்கி வரக்கூடிய வாரத்தில் உள்ள செவ்வாய்க்கிழமை மாலை 5:00 மணிக்கு விழாக் குழுவிடம் பாரியை ஒப்படைத்து விடுகிறோம்.

சைவ உணவு முறைகளை கடைப்பிடித்து அம்மன் பாடல்களை பாடியும் ஆண்கள் ஒயிலாட்டம், பெண்கள் கோலாட்டம், கும்மியடித்தும் இரவு நேரத்தில் அம்மன் துதி பாடல்களை பாடுகின்றனர்.

புதன்கிழமை அன்று மாலை பாரி சம்பந்தப்பட்ட ஊர்களில் உள்ள நீர்நிலைகளில் கங்கை சேர்க்கும் நிகழ்ச்சிகளில் கரைக்கப்படுகிறது.

தமிழர்களின் வாழ்வியல் மற்றும் பண்பாடுகளில் முளைப்பாரி உற்ஸவம் இரண்டற கலந்துள்ளது. முளைப்பாரியில் பாடக்கூடிய வேளாண்மை பாட்டு மற்றும் ராமாயண பாடல்கள் உடலுக்கும் உள்ளத்திற்கும் உற்சாகம் தரக்கூடியது என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !