தஞ்சாவூர் பெரிய கோவிலில் தொல்லியல்துறை, அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு
தஞ்சாவூர்; உலகப்புகழ் தஞ்சாவூர் பெருவுடையார் கோவிலின் எட்டு திசைகளில், ஆகம விதிகள்படி இந்திரன், அக்னி தேவன், எமன், நிருதி, வருண தேவன், வாயு தேவன், குபேரன், ஈசானன் உள்ளிட்ட அஷ்டதிக் பாலகர்களின் சன்னதிகள் உள்ளன. இதில், இந்திரன், எமன், நிருதி, குபேரன் ஆகிய நான்கு சன்னிதிகளில் சிலை இன்றி, பூட்டிய நிலையில் உள்ளன. மீதமுள்ள நான்கு சன்னிதிகளில் சிலைகள் பராமரிப்பின்றி சிதைந்துள்ளன. பக்தர்கள், வழிபட முடியவில்லை. பூஜைகள் தடையின்றி நடக்க ஏதுவாக, அஷ்டதிக் பாலகர்களின் சன்னிதிகளை, முறையாக பராமரிக்க வேண்டும். சிதைந்த சிலைகளுக்கு மாற்றாக, புது சிலைகள் நிறுவ அனுமதிக்க, மத்திய தொல்லியல்துறை அனுமதி தர வேண்டும் என தஞ்சாவூரை சேர்ந்த கலியமூர்த்தி என்பவர் கடந்த 2019ம் ஆண்டு பொதுநல மனு தாக்கல் செய்தார்.
இம்மனு மீதான விசாரித்த நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஆர்.சக்திவேல் பிறப்பித்த உத்தரவில், தஞ்சாவூர் அறநிலையத்துறை இணை கமிஷனர், மத்திய தொல்லியல்துறை திருச்சி உதவி கண்காணிப்பு அலுவலர், கோவிலின் பரம்பரை அறங்காவலர் ஆகியோர் இணைந்து, கோவிலில் ஆய்வு செய்து, வரும் ஜூலை 28ம் தேதி ஆய்வறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என, உத்தரவிட்டனர். தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின் பேரில், இந்திய தொல்லியல்துறை திருச்சி மண்டல கண்காணிப்பாளர் அறவாழி, உதவி கண்காணிப்பாளர் வெற்றிச்செல்வி, முதுநிலை பாராமரிப்பு அலுவலர் சோபிதா, இந்து சமய அறநிலையத்துறை திருச்சி மண்டல இணை கமிஷனர் ஞானசேகர், உதவி கமிஷனர் கார்த்திகேயன், அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே ஆகியோர் ஆய்வு செய்தனர்.