‘கோ’ தங்கிய பாளையத்து ‘அம்மன்’ மக்களுக்கு அருளை வாரி வழங்கும் மாரியம்மன்
பல்லடம் அருகே, அரசர்கள் தங்கியிருந்து வழிபட்டுச் சென்ற கோ தங்கிய பாளையத்து அம்மன், இன்று, கோடங்கிபாளையம் மாரியம்மனாக பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் தாலுகா, கோடங்கிபாளையத்தில் அமைந்துள்ளது அருள்மிகு மாரியம்மன் கோவில். இக்கோவில், ஹிந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது.
கோவில் பாண்டியர் காலத்தில் கட்டப்பட்டது என்பதற்கு ஆதாரமாக, கோவில் சுவர்களில், பாண்டிய மன்னர்களின் சின்னமான மீன் கொடி பதிக்கப்பட்டுள்ளது. கோவிலை சுற்றிலும் விநாயகர், வள்ளி தெய்வானை உடனமர் முருகன், சங்கிலி கருப்பண்ணசாமி, அரச மரத்து விநாயகர், முத்துக் கருப்பண்ணசாமி ஆகிய தெய்வங்களுக்கு தனித்தனி சன்னதிகளும் உள்ளன. மாரியம்மன் கோவில் பிரகாரத்தில் துர்க்கை அம்மன் சன்னதியும் உள்ளது.
பூச்சாட்டு விழா இக்கோவில் கோடங்கிபாளையம், சின்னக் கோடங்கிபாளையம், காரணம்பேட்டை, சங்கோதிபாளையம், பெருமாக்கவுண்டம்பாளையம், மேற்கு ராசாக்கவுண்டம்பாளையம், கொத்துமுட்டிபானையம் ஆகிய, 7 ஊர்களில் காணியாக விளங்குகிறது. சித்திரை மாதத்தில் செல்லாண்டியம்மன் மற்றும் அண்ணன்மார் சுவாமிகளுக்கும், மாசி மாதம் மாரியம்மனுக்கும் பூச்சாட்டு விழா நடத்தப்பட்டு வருகிறது.
ஆண்டுதோறும் பூச்சாட்டு விழாவானது ஏழு ஊர் மக்களின் ஆதரவுடன், அவர்களின் பங்களிப்போடு, 15 நாள் திருவிழாவாக சீரும் சிறப்புடனும் நடத்தப்பட்டு வருகிறது. இக்கிராமம் பரப்பளவில் மிகப்பெரியதாக இருப்பதால், காரணம்பேட்டை, சங்கோதிபாளையம், பெருமாக் கவுண்டம்பாளையம், மேற்கு ராசாக்கவுண்டம் மக்கள் திருவிழாவின் போது கோடங்கிபாளையம் மாரியம்மன் கோவிலில் இருந்து தீர்த்தம் கொண்டு சென்று அந்தந்த ஊர்களில் பச்சை ஓலையில் கோவில் அமைத்து அதில் மாரியம்மன் திருவுருவச் சிலையை பிரதிஷ்டை செய்து திருவிழாக் கொண்டாடி வருகிறார்கள்.
மஞ்சள் நீராட்டு விழா முடிந்தவுடன் இச்சிலைகளை கங்கையில் கரைத்து விடுகின்றனர். இதற்காகவே. மேற்கண்ட ஊர்களில் ‘குடி கிணறுகள்’ உள்ளன. கோவில் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக விழாவின் இறுதி நாளில், எருமைக்கிடா ஒன்றை மாரியம்மனுக்கு பலியிடுவது முக்கிய நிகழ்வாக விளங்குகிறது. அப்போது ஏழு ஊர் மக்களும் திரளாகக் கூடி மாரியம்மனுக்கு போற்றி, என்ற முழக்கத்துடன் திருவிழாவை நிறைவு செய்கின்றனர்.
ஊர் பெயர் காரணம் அரசர்கள் நாடாண்ட போது சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் காலத்தில் மன்னர்கள் இந்தக் கோவிலில் தங்கியிருந்து வழிபட்டுச் செல்வது வழக்கம் என செய்திகள் கூறுகின்றன. இதனாலேயே இவ்வூருக்கு கோ தங்கிய பாளையம் எனப் பெயர் வந்தது எனவும், பின்நாளில், கோடங்கிபாளையம் என இப்பெயர் மருவியது எனவும் கூறுகிறார்கள்.
இதற்காக இக்கோயிலில் உள்பிரகாரத்திலும் கிணறு ஒன்றும் உள்ளது இதே ஊரில் அருள்மிகு மாகாளி அம்மன், அருள்மிகு செல்லாண்டி அம்மன், அருள்மிகு அண்ணன்மார் சுவாமிகள் ஆகிய தெய்வங்களுக்கும் தனித்தனிக் கோவில்கள் உள்ளன. பூச்சாட்டு விழாவின் அறிகுறியாக, தொடக்க நிகழ்வாக அருள்மிகு செல்லாண்டி அம்மன் கோவிலில் வழிபட்டுவிட்டு, தேவையான வாள்கள், ஈட்டிகளுடன் மாரியம்மன் கோவிலுக்கு வரும் ஊர்ப்பூசாரி, சாமியாடி அருள்வாக்கு மற்றும் சொல்வது வழக்கம். இக்கோவில் சம தர்மத்துக்கும், பல குலமக்களின் ஒற்றுமைக்கும் எடுத்துக்காட்டாக விளங்குகிறது. கொங்கு வேளாளர்களின் நிர்வாகத்தில் இருந்தாலும், திருவிழாவின் போது அணைத்து சமூகத்தினரும் பொறுப்புகளைப் பதிர்ந்து கொண்டு இணைந்தே திருவிழாக்களைக் கொண்டாடுவது தொன்று தொட்டு வழக்கமாக இருந்து வருகிறது.