திருப்பூர், பல்லடம், அவிநாசி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
திருப்பூர்: ஆடி மாதத்தின் 2-வது வெள்ளிக்கிழமையையொட்டி, திருப்பூர், பல்லடம், அவிநாசி சுற்றுப்பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடுகள் வெகுவிமரிசையாக நடந்தன.
வாலிபாளையம் மாகாளியம்மன் கோவில், அணைக்காடு மாரியம்மன் கோவில் ஆகிய கோவில்களில் வெள்ளிக் கவச அலங்கார பூஜைகள் நடந்தன. நெசவாளர் காலனி ஸ்ரீராமலிங்க சவுடேஸ்வரி அம்மனுக்கு புஷ்ப அலங்காரமும், திருக்குமரன் நகர் ராஜராஜேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது. வேலம்பாளையம் கரியகாளியம்மன் கோவில், மங்கலம் பல்லடத்தம்மன் கோவில், கஞ்சம்பாளையம் ஸ்ரீ மகாமாரியம்மன் கோவில், பல்லடம் பொங்காளியம்மன் கோவில், திருப்பூர் கோட்டை மாரியம்மன் கோவில், கருவம்பாளையம் மாகாளியம்மன் கோவில், பிச்சம்பாளையம் மாரியம்மன் கோவில், முத்தணம்பாளையம் அங்காளம்மன் கோவில், டவுன் மாரியம்மன் கோவில், ஆண் டிபாளையம் மாரியம்மன் கோவில், பெரியார் காலனி கருப்பராயன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் அதிகாலையில் சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன.
அம்மனுக்கு வேப்பிலை மாலை, எலுமிச்சை மாலை அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. கோவில் வளாகங்களில் வேப்பிலைத் தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன. அம்மனுக்கு வெங்காயம் கலந்த ராகிக்கூழ் படைக்கப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. சில கோவில்களில் அன்னதானமும் நடந்தது. ஆடி வெள்ளி விரதம் இருந்த பெண்கள் மாவிளக்கு ஏற்றி, நேர்த்திக்கடன் செலுத்தினர். பெண்களுக்கு மஞ்சள் சரடு, மஞ்சள், குங்குமம், வளையல் மற்றும் பூ ஆகியவை பிரசாதமாக வழங்கப்பட்டன. திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் ஸ்ரீ விசாலாட்சி அம்மனுக்கு அதிகாலையில் சிறப்பு அபிஷேக பூஜைகள் நடந்தன. மாலையில் பொன்னுாஞ்சல் உற்சவம் நடந்தது. ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவில், கருவம்பாளையம் மாகாளியம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் ஊஞ்சல் உற்சவம் விமரிசையாக நடந்தது.