அம்மன் கோயில்களில் பூக்குழி உற்ஸவம், முளைக்கொட்டு விழா
ராமநாதபுரம்: ராமநாதபுரம் வெளிபட்டணம் திரவுபதி அம்மன் கோயிலில் ஆடி 18ம் நாள் உற்ஸவ விழாவில் அர்ஜுனன் தபசு, அரவான் களப்பலி மற்றும் பீமன் வேடம் அணிந்து நகர்வலம் நிகழ்ச்சி நடந்தது. நேற்று (ஜூலை 28) இரவு பஞ்சபாண்டவர்கள் உற்ஸவமூர்த்திகள் புறப்பாடும், தொடர்ந்து அதிகாலையில் பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
அழகன்குளம் பாரதிநகர் முத்துமாரியம்மன் கோயிலில் முளைக்கொட்டு உற்ஸவ விழா நடந்தது. பக்தர்கள் முளைப்பாரிகள் எடுத்து ஊர்வலமாக வந்தனர். அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரத்தில் பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். வாலாந்தரவை ஊராட்சி உடைச்சியார் வலசை கிராமத்தில் பெரிய முத்து மாரியம்மன் கோயிலில் நடந்த முளைக்கொட்டு உற்ஸவ விழாவில் நேற்று இரவு அய்யனார் கோயிலில் பூஜாரி கருப்பையா அம்மன் கரகத்தை எடுத்து வந்தார், கண்ணன் சாமி விபூதி வழங்கினார். முளைப்பாரிகளை பக்தர்கள் ஊர்வலமாக கொண்டு சென்று ஊருணியில் கரைத்தனர். அப்போது விவசாயம் செழிக்கவும், மழை பெய்யவும் வேண்டினர். கிராம மக்கள் பலர் பங்கேற்றனர்.
*திருப்புல்லாணி அருகே தினைக்குளம் ஊராட்சி மொத்திவலசை மேற்கில் முளைக்கொட்டு உற்ஸவம் நடந்தது. நாள் தோறும் கோயில் முன் வளாகத்தில் கும்மியாட்டம், ஒயிலாட்டம் நடந்தது. மூலவர் முத்துமாரியம்மனுக்கு 16 வகை அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நடந்தது. ஏராளமான பெண்கள் பொங்கலிட்டனர். பகலில் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் அம்மன் சக்தி கரகம் முன்னே செல்ல ஊர்வலம் நடந்தது. விழா ஏற்பாடுகளை மொத்தி வலசை மேற்கு கிராம மக்கள் செய்திருந்தனர்.
பெரியபட்டினம் அருகே கிருஷ்ணாபுரம் காந்தாரி அம்மன் கோயிலில் பூக்குழி உற்ஸவ விழா நடந்தது. மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நடந்தது. பகலில் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவில் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. ரெகுநாதபுரம் கீழவலசை முத்துமாரியம்மன் கோயிலில் முளைப்பாரி உற்சவத்தை முன்னிட்டு இன்ற பாரி ஊர்வலம் நடந்தது.
ரெகுநாதபுரம் அருகே நைனாமரைக்கான் முத்து மாரியம்மன் கோயிலில் நடந்த முளைப்பாரி உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மாலையில் முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.