உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குருவின் வார்த்தைகளே ஞானத்திற்கு அடித்தளம்

குருவின் வார்த்தைகளே ஞானத்திற்கு அடித்தளம்

சென்னை: ‘‘குருவின் வார்த்தைகளே, ஞானத்திற்கு அடித்தளம்,’’ என, தக் ஷினம்னாய சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பி.ஏ.முரளி பேசினார்.

தக் ஷினம்னாய சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம் சார்பில், ‘வந்தே குருபரம்பராம்’ நிகழ்ச்சி, நேற்று சென்னை, ஆழ்வார்பேட்டை, நாரதகான சபாவில் தொடங்கியது; வரும் 13ம் தேதி வரை, தினமும் மாலை 6:00 மணி முதல் நடக்கும்.

நிகழ்ச்சியில் தலைமை ஏற்று பி.ஏ.முரளி பேசியதாவது:

மாதா, பிதா, குரு, தெய்வம் என்பதை, தினமும் போற்றி வணங்கவே, குரு பூர்ணிமா முதல், இரண்டு மாதங்களுக்கு சாதுர்மாஸ்ய விரதம் கடைபிடிக்கப்படுகிறது. அப்போது, நம் குருவே நம் முன் தோன்றி, நமக்கு அருளாசி வழங்குவார்.

அந்த வகையில், நாம் கடவுளுக்குச் செலுத்தும் அதே பக்தியை குருவிற்கும் செலுத்த வேண்டும். காரணம், வேதங்களின் உண்மைப் பொருளாக இருப்பவர் கடவுள்; அதை, நமக்கு விளக்குபவர் குரு.

நமக்கு பல குருமார்கள் இருந்தாலும், அவர்களில் பிரம்ம வித்யாவை உணர்ந்து, அதை சீடர்களுக்கு கற்றுக் கொடுத்து, ஒவ்வொருவரின் தகுதிக்கு ஏற்ப படிப்படியாக வழிநடத்தக் கூடியவரே உயர்ந்த குரு. இன்று, நமது ஆன்மிகப் புரிதலும், நாம் கொண்டாடும் கலாசாரமும், ஒருவர் பின் ஒருவராக பாதுகாத்து, அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கடத்தியதால் கிடைத்தவை.

‘குரு பூர்ணிமா’ என்பது ஒரு ஆசிரியருக்கான நாள் மட்டுமல்ல; இது நம் முழு குரு பரம்பரையையும் நாம் வணங்கும் நாள். குரு நமக்கு தகவல்களை கொடுப்பதில்லை; மாறாக நம் பார்வையே மாற்றுகிறார். அது ஆன்மிக குருமார்களின் தொடர்ச்சியான வரிசை. ஒவ்வொரு குருமாரும் உரிய ஞானத்தை பெற்று, அதன்படி வாழ்ந்து, அதை அடுத்த தலைமுறைக்கு கடத்துகின்றனர்.

இன்று முதல் 13ம் தேதி வரை, தினமும் இசை நிகழ்ச்சிகளின் வாயிலாக நம் பாரம்பரிய கருத்துகளை பரப்ப உள்ளனர். நம் பாரம்பரியத்தில், இசை ஒரு பொழுதுபோக்காக மட்டும் இருந்ததில்லை. அது, எப்போதும் ஆன்மிகத்துடன் கலந்து, வழிபாடாகவே வந்திருக்கிறது.

இந்த சாதுர்மாஸ்ய காலத்தில் குருவுடன் இணைந்த அர்த்தமுள்ள கருத்துகளை உள்வாங்கி, அதை செயல்படுத்தினால் வெற்றி பெறுவது நிச்சயம். நமக்கு நல்வழி காட்டும் குருவின் பாதங்களே வழிபாட்டிற்கு அடித்தளம். குருவின் வார்த்தைகளே ஞானத்திற்கு அடித்தளம். குருவின் அருளே விடுதலைக்கு அடித்தளம்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக, சென்னை சிருங்கேரி பாரதி வித்யாஷ்ரமத்தின் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, கிருஷ்ணா ஸ்வீட்ஸ் உரிமையாளர் முரளி ஆகியோர் பங்கேற்றனர்.

அதைத்தொடர்ந்து, ராமகிருஷ்ணமூர்த்தி, மகேஷ்வரன் நம்பூதிரி ஆகியோரின் இசை நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சி தொடங்கும் முன், உலக அமைதிக்காக சிவ சகஸ்ரநாமம் நடந்தது. இன்று முதல் விஷ்ணு, லலிதா சகஸ்ரநாமங்களும், சவுந்தர்ய லகரியும் மூன்று நாட்கள் நடக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !