மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை
செஞ்சி: விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில், ஆவணி மாத பவுர்ணமியை முன்னிட்டு 108 பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை நேற்று மாலை நடந்தது. இதையொட்டி அதிகாலை அங்காளம்மனுக்கும், சிவபெருமானுக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. அம்மன் வெள்ளிக் கவச அலங்காரம் செய்தனர். உற்சவர் அங்காளம்மனுக்கு பல்வேறு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்து, உட்பிரகாரத்தில் எழுந்தருள செய்தனர் யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர். மாலை 6.00 மணியளவில் பம்பை, உடுக்கை மற்றும் மேளதாளம் முழங்க உற்சவ அம்மன் முன்னிலையில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் 108 பெண்கள் நீண்ட வரிசையில் அமர்ந்து விளக்கேற்றி பூஜை செய்தனர். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அர்ச்சனை செய்து, மகா தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சக்திவேல், அறங்காவலர் குழு தலைவர் ஏழுமலை, நடைமுறை அறங்காவலர் பச்சையப்பன், அறங்காவலர்கள் சுரேஷ், மதியழகன், சரவணன், வடிவேல், சந்தானம், கோவில் மேலாளர் சதீஷ், காசாளர் மணி மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்