மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்திற்காக குன்றத்து முருக பெருமான் புறப்பாடு
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்பதற்காக திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் செப். 16ல் புறப்பாடாகிறார்.
உலகப் பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம் செப்.17ல் நடக்கிறது. கும்பாபிஷேகத்தில் பங்கேற்பதற்காக தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமி செப்.16 காலையில் புறப்பாடாகிறார். கும்பாபிஷேகம் முடிந்து செப். 17ல் சுப்ரமணிய சுவாமி, தெய்வானை திருப்பரங்குன்றம் கோயிலுக்கு திரும்புவர்.
வழக்கமாக மீனாட்சி அம்மன் கோயிலில் நடைபெறும் திருக்கல்யாணத்தில் பங்கேற்க சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, பவள கனிவாய் பெருமாள் திருப்பரங்குன்றத்தில் இருந்து புறப்பாடாவர். ஆவணி மூல திருவிழாவில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை பங்கேற்பர்.
இந்த ஆண்டு கும்பாபிஷேகத்தில் பங்கேற்பதற்காக மூன்றாவது முறையாக சுப்பிரமணிய சுவாமி திருப்பரங்குன்றத்திலிருந்து புறப்பாடாகிறார்.