இரண்டு நாள் செம்பை சங்கீத உற்சவம் செப். 12ம் தேதி துவக்கம்
பாலக்காடு: செம்பை வைத்தியநாத பாகவதரின், 130வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, பாலக்காடில் இரு நாள் சங்கீத உற்சவம் வருகிற செப். 12ம் தேதி துவங்குகிறது.
கேரள மாநிலம், பாலக்காடு செம்பை பார்த்தசாரதி கோவில் கலையரங்கில், 12ம் தேதி பிற்பகல் 3:00 மணிக்கு திருபிரயார் ஸ்ரீரஞ்சனி கலாஷேத்ரா மற்றும் மஞ்சேரி சுவாதி திருநாள் குருகுல மாணவர்களின் சங்கீத ஆராதனை துவங்குகிறது. மாலை, 6:00 மணிக்கு கதகளி கலைஞர் கோட்டக்கல் மது, விழாவை துவக்கி வைக்கிறார். 6:30 மணிக்கு அனன்யா, அமேய ஆகியோரின் வயலின் கச்சேரியும் ஜாஸ்மின் ஒற்றப்பாலத்தின் இசை கச்சேரியும் நடக்கிறது. 13ம் தேதி காலை, 11:30 மணிக்கு செம்பை வித்யா பீடத்தின், 40வது ஆண்டு மாநாட்டை, கோட்டக்கல் ஆரியவைத்திய சாலா நிர்வாக அறங்காவலர் பி.எம். வாரியர் துவக்கி வைக்கிறார். தொடர்ந்து மதியம், 12:30 மணிக்கு மண்ணுார் ராஜகுமாரனுண்ணி குழுவினரின் இசைக்கச்சேரி நடக்கிறது. இந்த இருநாள் சங்கீத ஆராதனையில், 172க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை, செம்பை வித்யா பீடம் தலைவர் செம்பை சுரேஷ், செயலர் முருகன் செய்துள்ளனர்.