திருமலை திருப்பதியில் கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் வெகு விமரிசை
திருப்பதி; திருமலை ஸ்ரீவாரி கோயிலில் கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் (கோயில் தூய்மைப்படுத்தும் விழா) இன்று செவ்வாய்க்கிழமை அன்று மிகுந்த பக்தியுடன் நடைபெற்றது. இந்தத் தூய்மைப்படுத்தும் பணியில் தேவஸ்தான தலைவர் பி.ஆர். நாயுடு, கூடுதல் செயல் அதிகாரி வெங்கய்ய சௌத்ரி, கோயில் அர்ச்சகர்கள், அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வின்போது கூடுதல் செயல் அதிகாரி செய்தியாளர்களிடம் கூறியதாவது; வருடாந்திர ஸ்ரீவாரி பிரம்மோற்சவங்கள் செப்டம்பர் 15 முதல் 23 வரை வெகு விமரிசையாக நடைபெறவுள்ளதாகவும், அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்துள்ளதாகவும் தெரிவித்தார். பிரம்மோற்சவம், யுகாதி, அனிவார ஆஸ்தானம் மற்றும் வைகுண்ட ஏகாதசி போன்ற முக்கிய விழாக்களுக்கு முந்தைய செவ்வாய்க்கிழமைகளில், கோயில் ஆகம மரபுகளின்படி கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடத்துவது வழக்கம் . ஆனந்த நிலையம் முதல் தங்க வாசல் (பங்கரு வகிலி) வரையிலான பகுதிகள், கோயிலுக்குள் உள்ள உப சன்னதிகள், பிரசாதம் தயாரிக்கும் இடம் கோயில் வளாகம், சுவர்கள், மேற்கூரைகள் மற்றும் வழிபாட்டுப் பொருட்கள் என அனைத்தும் இந்தத் தூய்மைப்படுத்தும் பணியில் அடங்கும் என்று அவர் கூறினார்.
காலை 6:00 மணி முதல் 10:00 மணி வரை ஆகம சாஸ்திரங்களின்படி அர்ச்சகர்களால் இந்தத் தூய்மைப்படுத்தும் சடங்கு நடத்தப்பட்டது. இக்காலகட்டத்தில், மூலவர் திருமேனி முழுவதுமாக ஒரு துணியால் மூடப்பட்டிருந்தது. தூய்மைப்படுத்தும் பணி நிறைவடைந்த பிறகு, நாமகொபு, ஸ்ரீசூர்ணம், கஸ்தூரி மஞ்சள், பச்சைக் கற்பூரம், கட்டிக் கற்பூரம், சந்தனப் பொடி, குங்குமம் மற்றும் கிச்சிலி கிழங்கு போன்ற பொருட்கள் கலந்த புனித நறுமண நீர் கோயில் முழுவதும் தெளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அர்ச்சகர்கள் மூலவர் மீதிருந்த துணியை அகற்றி, சாஸ்திர மரபுகளின்படி சிறப்பு வழிபாடுகள் மற்றும் நைவேத்தியம் (உணவுப் படைத்தல்) ஆகியவற்றை மேற்கொண்டனர். பின்னர் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.