மீஞ்சூர் வரதராஜ பெருமாள் கோவில் குளத்திற்கு விமோசனம் எப்போது
மீஞ்சூர்: மீஞ்சூர் வரதராஜ பெருமாள் கோவில் திருக்குளம் குப்பை கொட்டும் இடமாகவும், செடி, கொடி வளர்ந்தும், பராமரிப்பின்றி இருப்பதால், விமோசனம் கிடைப்பது எப்போது என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.
‘வடகாஞ்சி’ என அழைக்கப்படும் மீஞ்சூர் வரதராஜ பெருமாள் கோவில், 500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. காஞ்சிபுரம் வரதாஜ பெருமாள் கோவில் போல, இங்கும் 10 நாட்கள் வைகாசி பிரம்மோத்சவம் வெகுவிமரிசையாக நடைபெறும். இக்கோவிலின் பின்புறம், ‘ஆனந்தபுஷ்கரணி’ என்ற குளம் பராமரிப்பின்றி உள்ளது.
இந்த குளத்தில் ஆகாயத்தாமரைகள் சூழ்ந்தும், செடிகள் வளர்ந்தும் உள்ளன. குடியிருப்புகளில் இருந்து கழிவுநீர் மற்றும் குப்பை கழிவுகள் கொட்டும் இடமாகவும் இந்த குளம் மாறியுள்ளது. பல ஆண்டுகளாக இதே நிலையில் குளம் இருப்பதால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
எனவே, குளத்தில் உள்ள ஆகாயத்தாமரை, செடி, கொடிகளை அகற்றிவிட்டு, துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.