உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விநாயகர், கைலங்கிரி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலம்

விநாயகர், கைலங்கிரி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலம்

ப.வேலூர்: காந்திநகரில் உள்ள விநாயகர், தன்னாசியப்பன், கைலங்கிரி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, நாளை (பிப்., 20) கோலாகலமாக நடக்கிறது. ப.வேலூர், சுல்தான்பேட்டை காந்திநகரில், விநாயகர், தன்னாசியப்பன், கைலங்கிரி அம்மன் மற்றும் மதுரை வீரன் ஸ்வாமிக்கு, மிகுந்த பொருட்செலவில், புதிதாக கோவில் கட்டும் பணி, கடந்த ஆண்டு துவங்கியது. திருப்பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், நாளை (பிப்., 20) கும்பாபிஷேகம் செய்ய, விழாக்குழுவினர் முடிவு செய்தனர்.அதன்படி, இன்று (பிப்., 19) அதிகாலை, 4 மணிக்கு மகா கணபதி ஹோமத்துடன் விழா துவங்குகிறது. காலை, 8.30 மணிக்கு, காவிரி ஆற்றுக்குச் சென்று புனித நீர் எடுத்துக்கொண்டு கோவில் வந்தடைகிறது. மாலை, 6 மணிக்கு விநாயகர் பூஜை, சங்கல்பம், புண்யாகம், வாஸ்துசாந்தி, முதற்கால யாகசாலை பிரவேசம், இரவு, 9.30 மணிக்கு கலசம் வைத்தல், அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நிகழ்ச்சி நடக்கிறது.நாளை (பிப்., 20) அதிகாலை, 4 மணிக்கு, இரண்டாம்கால யாகவேள்வி, நாடி சந்தானம், மூலமந்திர ஹோமங்கள் நடக்கிறது. தொடர்ந்து, காலை, 6 மணிக்கு விநாயகர், தன்னாசியப்பன், கைலங்கிரி அம்மன், மதுரை வீரன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.தொடர்ந்து, ஸ்வாமி தரிசனம், பிரசாதம் வழங்குதல், சிறப்பு அலங்காரத்தில் ஸ்வாமி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். ஏற்பாடுகளை, விழாக்குழுவினர், ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !