உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வரதராஜ பெருமாள் தெப்போற்சவம் கோலாகலம்!

வரதராஜ பெருமாள் தெப்போற்சவம் கோலாகலம்!

வாலாஜாபாத்: தென்னேரி தெப்போற்சவம், நேற்று முன் தினம் இரவு கோலாகலமாக நடந்தது. வாலாஜாபாத் அடுத்த, தென்னேரி கிராமத்தில் உள்ள ஏரியில், ஆண்டுதோறும் தெப்போற்சவம் நடைபெறும். காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கிராமத்திற்கு வந்து, தெப்பத்தில் பவனி வருவார். இந்தாண்டு தெப்போற்சவத்தையொட்டி, நேற்று முன்தினம் காலை 8:00 மணிக்கு, தென்னேரி வந்தடைந்தார். அங்குள்ள மக்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர். மேளதாளங்கள் ஒலிக்க அதிர்வேட்டுகள் முழுங்க வீதியுலா நடந்தது. பின்னர் வரதராஜப் பெருமாள் அயிமிச்சேரி, நாவட்டான்குளம், திருவங்காரணை, குன்னவாக்கம், மலையடிவாரம், அகரம் ஆகிய கிராமங்களில் மண்டகப்படி கண்டருளினார். மாலை 5:30 மணிக்கு, மீண்டும் தென்னேரியை வந்தடைந்தார்.
இரவு 8:00 மணிக்கு, மலர் அலங்காரத்தில் அலங்கரிக்கப் பட்ட தெப்பத்தில் எழுந்தருளினார். ஏரியில் தெப்போற்சவத்திற்கு போதிய தண்ணீர் இல்லாததால், நிலை தெப்பல் நடந்தது. பக்தர்கள் உற்சாகத்துடன் பெருமாளை வணங்கி சென்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை, தென்னேரி கிராமத்தினர் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !