திருச்செந்தூர் ஸ்ரீஅகத்தியர் கோயிலில் குரு பெயர்ச்சி விழா
திருச்செந்தூர்: திருச்செந்தூர் ஸ்ரீஅகத்தியர் கோயிலில் குரு பெயர்ச்சி விழாவை முன்னிட்டு இரவு சிறப்பு ஹோமம் மற்றும் வழிபாடு நடந்தது. நவகிரகங்களில் சுப கிரகமான குருபகவான் ரிஷப ராசியிலிருந்து, மிதுன ராசிக்கு கடந்த 28ம் தேதி மாலை 6.45 மணிக்கு பெயர்ச்சியானார். இதனை முன்னிட்டு திருச்செந்தூர் சன்னதி தெருவிலுள்ள ஸ்ரீஅகத்தியர் கோயிலில் சிறப்பு கும்ப பூஜை, குருபெயர்ச்சி ஹோமம் நடந்தது. தொடர்ந்து அகத்திய பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், மகா கும்பாபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது. அதன்பின்னர் அகத்தியர் நாம வழிபாடு, தீபவழிபாடு, திருமுறை பாராயணம் ஆகியன நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பொதிகை மலை புனித யாத்திரை குழுவினர் மற்றும் செந்தில் பொதிகை ஸ்ரீஅகத்தியர் சன்மார்க சங்கத்தினர் செய்திருந்தனர்.