பெருமாள் கோயில் புதிய தேர் இறுதிகட்ட பணியில் தொய்வு
ஆண்டிபட்டி: ஜம்புலிபுத்தூர் கதலி நரசிங்கப்பெருமாள் கோயில், புதிய தேர் செய்யும் பணியில் இறுதிக்கட்ட பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பின்றி வெட்ட வெளியில் தேரை நிறுத்தியிருப்பதால் மழை,வெயிலால் பாதிப்படைந்து வருகிறது. மதுரை மீனாட்சி கோயில் நிதியில் 17 லட்சம் ரூபாய்செலவில்,ஜம்புலிபுத்தூர் கதலி நரசிங்கப்பெருமாள் கோயில் புதியதேர் செய்யும் பணி 2005ல் துவங்கியது.தேர் செய்யும் பணி முடிந்தது. திருச்சி, "பெல் நிறுவனத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட, நான்கு இரும்பு சக்கரங்கள் தேரில் பொருத்தப்பட்டுள்ளன. புதிய தேர் 27 அடி உயரமும், இரும்பு அச்சுக்கு மேல் ஐந்து அலங்கார அடுக்குகளும் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பிரம்மா அடுக்கான முதல் அடுக்கில் கதலிநரசிங்கப்பெருமாள், சிவன், விநாயகர், முருகன், லட்சுமி, சரஸ்வதி தெய்வங்களின் சிற்பமும், கோண அடுக்கான இரண்டாம் அடுக்கில் சிற்ப வேலைகளும்,மூன்றாம் அடுக்கில் பெருமாளின் அவதாரம், நான்காம் அடுக்கில் தேவாசனம் மற்றும் ஆழ்வார் அவதாரம், ஐந்தாம் அடுக்கில் உற்சவர் அமரும் சிம்மாசன பீடம் மற்றும் தசாவதார சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. தேருக்கான இறுதி கட்டப்பணிகளை விரைவில் முடிக்க அறநிலையத்துறை மூலம் அறிவுறுத்தப்பட்டு, மார்ச் 29ல் வெள்ளோட்டம் நடத்தப்பட்டது. "பெயின்டிங் வேலைகள் துவங்காததால், கடந்த ஆண்டு சித்திரை திருவிழாவில் தேரோட்டம் நடைபெறவில்லை. ஐந்து மாதங்கள் கடந்தும், இறுதி கட்ட பணிகளை இன்னும் துவக்கவில்லை. தற்போது புதிய தேரை வெட்ட வெளியில் பாதுகாப்பில்லாமல் நிறுத்தி வைத்துள்ளனர். இறுதி கட்ட பணிகளை விரைந்து முடிக்க, அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.