சரஸ்வதி கோவிலில் பாலவித்யா நிகழ்ச்சி
ADDED :4710 days ago
திருவாரூர்: திருவாரூர் அருகே, கூத்தனூர் சரஸ்வதியம்மன் கோவிலில், நேற்று விஜயதசமி விழாவில், குழந்தைகளுக்கு நெல்லில் எழுதக் கற்பிக்கும், பாலவித்யா நிகழ்ச்சி நடந்தது. கல்வித்தாய் என, அழைக்கப்படும் சரஸ்வதிக்கு, திருவாரூர் மாவட்டம், கூத்தனூரில், தனிக் கோவில் உள்ளது. இக்கோவிலில் எழுந்தருளியுள்ள, மகா சரஸ்வதிக்கு, ஆண்டுதோறும், சிறப்பு பூஜைகள் நவராத்திரி விழாவின் போது நடத்தப்படும். இந்த ஆண்டிற்கான சிறப்பு பூஜைகள், கடந்த, 6ம்தேதி துவங்கி, நாளை, 16ம் தேதி வரை நடக்கின்றன. விஜயதமியான நேற்று, பாலவித்யா நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில், பிள்ளைகளை நெல்லில் எழுத வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், தமிழகம் மற்றும் ஆந்திரா, கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, ஏராளமான பெற்றோர், பிள்ளைகளுடன் பங்கேற்றனர்.