மேல்மலையனூர் ஊஞ்சல் உற்சவம்: ஏராளமான பக்தர்கள் தரிசனம்!
செஞ்சி: மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நேற்று இரவு நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நேற்று இரவு அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடந்தது. முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வெள்ளி காப்பு அலங்காரம் செய்தனர். இரவு 12 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் துவங்கி 1 மணிவரை நடந்தது. ஊஞ்சல் மண்டபத்தில் அம்மன் ஏழுந்தருளியதும், கோவில் பூசாரிகளும், பக்தர்களும் அம்மன் பக்தி பாடல்களையும், தாலாட்டு பாடல்களையும் பாடினர். ஏராளமான பக்தர்கள் சாமி வந்து ஆடினர். இதில் இந்து சமாய அறநிலையத்துறை உதவி ஆணையர் பிரகாஷ், அறங்காவலர் தலைவர் சரவணன் மற்றும் அறங்காவலர்கள் கலந்து கொண்டனர். செஞ்சி டி.எஸ்.பி., பன்னீர் செல்வம் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிகளை செய்தனர். அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. தீபாவளி பண்டிகை, கேதார கவுரி விரத நாள் என்ற போதும் வழக்கம் போல் லட்கணக்கில் பக்தர்கள் வந்திருந்தனர்.