சபரிமலையில் மண்டல, மகரவிளக்கு பூஜைகள் தொடங்கப்பட்டது எப்போது ?
சபரிமலையில் முதன்முதலில் பரசுராமரே கோயில் அமைத்தார். அப்போது தர்மசாஸ்தாவின் விக்ரகத்தினையே அவர் அங்கே பிரதிஷ்டை செய்தார். தர்மசாஸ்தாவே மகிஷி வதம் செய்திட ஐயப்பனாக அவதரித்தார். அவதார நோக்கம் முடிந்ததும், சின் முத்திரையுடன் யோகபட்டம் தரித்து தவம் புரிந்தார் ஐயப்பன். நிறைவாக பரசுராமர் அமைத்த தர்மசாஸ்தா விக்ரகத்தில் ஐக்கியமானார். அதன் பிறகே சின்முத்திரை காட்டி யோகபட்டம் தரித்து, அமர்ந்த நிலையில் உள்ள ஐயப்பனின் வடிவம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஆதிகாலத்தில் சாஸ்தாவின் வடிவிற்கு ஆண்டுக்கு ஒருமுறை மகரசங்கராந்தி அன்று மட்டுமே வழிபாடுகள் நடத்தப்பட்டன. ஐயப்பன் வடிவம் அமைந்த பிறகே மாத பூஜைகள், மண்டல பூஜைகள், மகரவிளக்கு பூஜைகள் தொடங்கப்பட்டன.
அந்தக் காலத்தில் நான்கு வேதங்களையும் புராண சாஸ்திரங்களையும் முழுமையாக அறிந்தவர்களை நாலும் தெரிந்தவர்கள் என்று சொல்வார்கள். வேத புராணங்களை உருவாக்கிய சிவவிஷ்ணு மைந்தனானதால் பிறவியிலேயே அனைத்தையும் அறிந்திருந்தார் ஐயப்பன். ஆயினும் மானிட அவதார தர்மத்திற்கு ஏற்ப பந்தளராஜன் மகனாக வளர்ந்தபோது சகல சாஸ்திரங்கள், வேதங்கள், புராணங்கள் என அனைத்தையும் கற்று நாலும் தெரிந்தவர் என்ற பெருமை பெற்றிருந்தார்.