குற்றாலநாதர் கோயிலில் தாண்டவ தீபாராதனை
குற்றாலம்: குற்றாலம் குற்றாலநாதர் கோயில் திருவாதிரை திருவிழாவில் நடராஜர் பச்சை சாத்தி, தாண்டவ தீபாராதனை நடந்தது.குற்றாலம் குற்றாலநாதர், குழல்வாய்மொழி அம்பாள் கோயில் சித்திர சபை நடராசபெருமானுக்கு நடைபெறும் சிறப்புமிக்க மார்கழி திருவாதிரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி தொடர்ந்து நடந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனைகள், எழுந்தருளல் நடந்து வருகிறது. கடந்த 13ம்தேதி திருவிழாவில் நடராசர் மற்றும் பஞ்சமூர்த்திகள் தேரோட்டம் நடந்தது. இரவு சுவாமி பூத வாகனத்திலும், அம்பாள் கிளி வாகனத்திலும் எழுந்தருளினர். நேற்றுமுன்தினம் காலை நடராஜர் பச்சை சாத்தி, தாண்டவ தீபாராதனையும் இரவு பூங்கோயில் வாகனத்தில் எழுந்தருளலும் நடந்தது. நேற்று இரவு சுவாமி பூத வாகனத்திலும், அம்பாள் காமதேனு வாகனத்திலும் எழுந்தருளல் நடந்தது. இன்று (18ம்தேதி)அதிகாலை 4 மணிக்கு சித்ர சபையில் நடராசர் ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாராதனையும், 5.20 மணிக்கு திரிகூட மண்டபத்தில் ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாராதனையும் நடக்கிறது. விழாவில் கோயில் உதவி ஆணையர் கண்ணதாசன், செயல் அலுவலர் வெங்கடேஷ் மற்றும் மண்டகபடிதாரர்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.