தஞ்சை கோவிலில் தங்க கரண்டிக்கும் ஆவணம் ஏற்படுத்திய ராஜராஜசோழன்!
சென்னை: ""தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலில் பயன்படுத்தப்பட்ட, தங்க கரண்டிக்கு கூட, ராஜராஜசோழன் ஆவணங்களை ஏற்படுத்தினான். அக்கரண்டியின் கனம், நீளம், விலை போன்ற அனைத்து தகவல்களையும், ஆவணப்படுத்தினான். மக்களின் சொத்தில் வாங்கப்பட்ட பொருள் அனைத்துக்கும், வௌ?ப்படையான ஆவணம் இருக்க வேண்டும் என, நினைத்து ஆவணப்படுத்தினான், என, தொல்லியல் துறையின் முன்னாள் இயக்குனர், நாகசாமி கூறினார். இந்திரா காந்தி தேசிய கலை மையத்தின் சார்பில், "பிரகதீஸ்வரர் வாழும் மரபு மற்றும் நினைவுச் சின்னம் என்ற தலைப்பில், தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் ஓவியங்கள், சிற்பங்கள், கட்டட அமைப்பு குறித்த, புகைப்பட கண்காட்சி, நேற்று, சென்னையில் துவங்கியது. மயிலாப்பூரில் உள்ள, பாரதிய வித்யா பவனில் துவங்கிய கண்காட்சியை, முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் கோபால்சாமி துவக்கி வைத்தார். செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின், துணை இயக்குனர் அவ்வை நடராசன் சிறப்பு விருந்தினராக, கலந்து கொண்டார். தொல்லியல் துறையின் முன்னாள் இயக்குனர், நாகசாமி வாழ்த்துரை வழங்கினார். இந்திரா காந்தி தேசிய கலை மையத்தின் செயலர் திபலி கண்ணா, அறங்காவலர், பத்மா சுப்ரமணியன், விருந்தினர்களுக்கு, சிறப்பு செய்தனர்.
விழாவில், நாகசாமி பேசியதாவது: தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலின் கட்டுமானம், அமைப்பு, ஓவியங்கள், சிற்பங்களைப் போல, உலகின் வேறு எந்த நாட்டிலும், அமைக்கப்பட்டதில்லை. அக்கோவில் வாழும் வரலாறு; 4,000 ஆண்டுகள் கொண்ட தமிழ் மரபின், எடுத்துக்காட்டு. ஒவ்வொரு கட்டுமானத்திலும், மிக நேர்த்தியான நுட்பம், பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு கட்டுமானத்தின் பின்புலத்திலும், அறிவியல் காரணங்கள் உள்ளன. தஞ்சை கோவில், அறிவியல் அடிப்படையில் மட்டுமல்ல, பண்பாட்டின் அடிப்படையிலும் கட்டப்பட்டுள்ளது. சுந்தர சோழன் மறைவுக்கு பின், ராஜராஜ சோழன் அரியணை ஏற்க, அனைத்து மக்களும் விருப்பப்பட்டனர். ஆனால், எல்லாவற்றையும் உதறி விட்டு, தனது மாமன் உத்தம சோழனிடம், ஆட்சியை ஒப்படைத்தான். இந்நிகழ்வு, தமிழ் பண்பாட்டின் அடையாளம். அந்த பண்பாட்டு மரபில் வந்த, ராஜராஜ சோழன், பண்பாட்டின் தொடர்ச்சியாக, தஞ்சை கோவிலை, கட்டினான். அங்கு பதிக்கப்பட்ட கல்வெட்டுக்களை, சரி பார்ப்பதற்கே, தனியாக கண்காணிப்பாளரை நியமித்தான். அனைத்து உடமைகளையும் ஆவணப்படுத்தினான். அக்காலத்தில், கோவிலில் தங்க கரண்டி பயன்படுத்தப்பட்டது. அக்கரண்டி கனம், நீளம், விலை போன்ற அனைத்து தகவல்களையும், ஆவணப்படுத்தினான். மக்களின் சொத்தில் வாங்கப்பட்ட பொருள் அனைத்துக்கும், ?வளிப்படையான ஆவணம் இருக்க வேண்டும் என, விரும்பினான். அதனால், அனைத்துக்கும் ஆவணம் ஏற்படுத்தினான். இன்று அதே போல், அனைத்து ஆவணங்களும், டிஜிட்டல் மயமாக்கப்பட்டு, குறுந்தகட்டில் தயாராகி உள்ளது. அனைத்து ஆவணங்களும், டிஜிட்டல் மயமாக்கப்பட்ட கோவில், உலகில் வேறு எங்கும் இல்லை. இவ்வாறு, அவர் பேசினார். இக்கண்காட்சி, காலை, 10:00 முதல், இரவு, 7:00 மணி வரை, இன்று முதல், இம்மாதம், 31 வரை, நடக்கிறது.