கடலில்.. மீனவர் வலையில் சிக்கிய சூரிய பகவான் கற்சிலை!
ADDED :4213 days ago
மண்டபம்: மண்டபம் கடலில், மீனவர்கள் வலையில், "சூரிய பகவான் கற்சிலை சிக்கியது. ராமநாதபுரம் மாவட்டம்,மண்டபம் மன்னார் வளைகுடா கடலில், மீனவர்கள் மூவர், விசைப்படகில், நேற்று முன்தினம் மீன்பிடிக்க சென்றனர். நடுக்கடலில், முயல்தீவு அருகே, இரவு, 9:00 மணியளவில் மீன் பிடித்தபோது, வலையில் கற்சிலை ஒன்று சிக்கியது.நேற்று காலை கரை திரும்பிய மீனவர்கள், சிலையை மண்டபம் மரைன் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் கூறியதாவது, சிலையின் கீழ் பகுதியில் ஏழு குதிரைகளும், சிலையின் முகத்துக்குப்பின், சூரியனைப் போன்ற வட்டமும் உள்ளது. இச்சிலை சூரிய பகவான் சிலையாக இருக்கலாம்; ஒன்றரையடி உயரம், 10 கிலோ எடையுள்ள இச்சிலையை ராமநாதபுரம் தாசில்தாரிடம் ஒப்படைப்போம். இவ்வாறு அவர்கள் கூறினர்.