திருத்தணி முருகன் கோவிலில் பங்குனி கிருத்திகை விழா கோலாகலம்!
திருத்தணி : முருகன் கோவிலில், நேற்று நடந்த, பங்குனி மாத கிருத்திகை விழாவில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மூலவரை வழிபட்டனர். திருத்தணி முருகன் கோவிலில், நேற்று, பங்குனி மாத கிருத்திகை விழா நடந்தது. விழாவை முன்னிட்டு, அதிகாலை, 4:30 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மூலவருக்கு தங்கவேல், தங்ககிரீடம் உட்பட வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது. காலை, 9:30 மலைக்கோவிலில் உள்ள காவடி மண்டபத்தில், உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இரவு, 7:30 மணிக்கு உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி, மாடவீதியில் ஒரு முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காலை, 6:00 மணி முதல், இரவு, 9:00 மணி வரை, 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவரை வழிபட்டனர்.