முருகன் கோவில் வேலில் சொருகிய ... ஒரு எலுமிச்சை 31 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம்!
திருவெண்ணெய்நல்லூர்: முருகன் கோவில் வேலில் சொருகிய, ஒரு எலுமிச்சை பழம், 31 ஆயிரம் ரூபாய்க்கு, ஏலத்தில் விற்பனையானது. பழமையான கோவில்: விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அடுத்த ஒட்டனந்தல் கிராமத்தில், இரட்டைக் குன்றின் மீது, ரத்தினவேல் முருகன் கோவில் உள்ளது. கருவறையில், வேல் மட்டுமே அமைக்கப்பட்டு உள்ளது. 800 ஆண்டுகள் பழமையானது.இங்கு பங்குனி உத்திர திருவிழாவின் போது, ஒன்பது நாட்களும் வேலில் சொருகப்பட்ட எலுமிச்சை பழங்கள், 11ம் நாளில் இடும்பன் பூஜையில் வைத்து ஏலம் விடுகின்றனர். இப்பழத்தை வாங்கி சாப்பிட்டால், குழந்தை பிறக்கும் என, நம்பிக்கை உள்ளதால், பக்தர்கள் போட்டிபோடுவர்.இந்த ஆண்டு, பங்குனி உத்திர விழாவில், நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு இடும்பன் பூஜை நடந்தது. கும்பம் கொட்டி, படையலிடப்பட்டது. இந்த பூஜையில், கடந்த, 4ம் தேதி முதல் 13ம் தேதி வரை, வேலில் சொருகப்பட்டிருந்த, எலுமிச்சை பழங்கள் வரிசையாக ஏலம் விடப்பட்டன. ஆணி தைத்த பாதக்குறட்டின் மேல் நின்று, நாட்டாமை பாலகிருஷ்ணன் ஏலத்தை நடத்தினார். முதல் பழம், துலாம்பூண்டியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் -தனலட்சுமி தம்பதியினர், 31 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கி சாப்பிட்டனர்.
ரூ.49ஆயிரம்: மற்ற பழங்கள் ஒவ்வொன்றும், 2,000 ரூபாய்க்குள் ஏலம் போனது. ஏலத்தில் உள்ளூர் பிரமுகர்கள் மட்டுமே பங்கேற்று, பழங்களை பிறருக்கு வழங்கினர். ஒன்பது பழங்களும், 48,900 ஆயிரம் ரூபாய்க்கு, ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது.ஏலம் எடுத்த தம்பதியினர், ஈரத்துணியுடன் பழத்தை வாங்கிச் சென்றனர். இவர்களுக்கு, ஒரு பிடி கருவாட்டு சாதமும் வழங்கப்பட்டது. 2012ல், ஏலத்தில் பழத்தை வாங்கிச் சாப்பிட்ட பலர், குழந்தையுடன் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.