பெருமாள் கோவில் பிரமோற்சவம் இன்று நிறைவு!
பொள்ளாச்சி : பொள்ளாச்சி கரிவரதராஜப்பெருமாள் கோவிலில், பிரமோத்ஸவம் விழா இன்று நிறைவு பெறுகிறது. விழாவையொட்டி, கடந்த 5ம் தேதி மாலை 5:30 மணிக்கு அனுக்ஞை, வாஸ்து சாந்தியுடன் பிரமோத்ஸவம் விழா துவங்கியது. தொடர்ந்து 7ம் தேதி காலை 9:00 மணிக்குள் திருப்பல்லக்கு வெங்கடாஜலபதி அலங்காரம்; மாலை 6:00 மணிக்கு அன்னபட்சி வாகனத்தில், ஆண்டாள் அலங்காரத்தில் திருவீதி உலா செல்லும் நிகழ்ச்சி இடம்பெற்றது. தொடர்ந்து, 8ம் தேதி, அனுமார் வாகனத்திலும்; 9ம் தேதி சேஷ வாகனத்திலும், 10ம் தேதி கருட வாகனத்திலும், 11ம் தேதி யானை வாகனத்திலும் பெருமாள் வீதி உலா செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. அடுத்து 12ம் தேதி திருக்கல்யாண உற்சவமும்; 13ம் தேதி குதிரை வாகனத்திலும் வீதி உலா செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து, 14ம் தேதி காலை 6:00 மணிக்கு மேல் 7:30 மணிக்குள் தேரில், பெருமாள் எழுந்தருளல், 9:00 மணிக்கு மேல் 10:30மணிக்குள் வடம்பிடித்தல் நிகழ்ச்சியும்; மாலை 6:00 மணிக்கு திருவீதியுலா நிகழ்ச்சியும் நடந்தது. நேற்று காலை 6:00 மணிக்கு தீர்த்த வாரியும்; மாலை 3:30 மணிக்கு துவாதச ஆராதனம், மாலை 6:00 மணிக்கு புஷ்ப பல்லக்கு திருவீதியுலாவும் நடந்தது. நிறைவாக இன்று காலை 7:00 மணிக்கு விடையாற்றி நிகழ்ச்சியும் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் வெண்மணி, உதவி ஆணையர் அனிதா மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.