பாழாகும் காளஹஸ்தீஸ்வரர் கோவில் குளம்!
ADDED :4309 days ago
பொன்னேரி : பொன்னேரி அடுத்த, சைனாவரம் கிராமத்தில் உள்ள காளஹஸ்தீஸ்வரர் கோவில் குளம் கோரை புற்கள் வளர்ந்து, பாழாகி வருகிறது. பொன்னேரி அடுத்த, சைனாவரம் கிராமத்தில், தச்சூர் செல்லும் சாலையை ஒட்டி ஞானபிரசன்னாம்பிகை சமேத காளஹஸ்தீஸ்வரர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தினை ஒட்டி அமைந்து உள்ள, கோவில் குளம் உரிய பராமரிப்பு இன்றி கிடக்கிறது. குளம் முழுவதும் கோரை புற்களும், செடிகளும் வளர்ந்து, அதன் பொலிவு இழந்து உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன், ஊராட்சி நிர்வாகத்தால் குளம் சீரமைக்கப்பட்டது. தொடர் பராமரிப்பு இல்லாமல் தற்போது, குளம் பாழாகி வருகிறது. இது கோவிலுக்கு வரும் பக்தர்களை வேதனையடைய செய்கிறது. மேற்கண்ட கோவில் குளத்தினை சீரமைக்க, சாலையை ஒட்டி தடுப்பு சுவர்கள் அமைக்க வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.